பாபர் மசூதி இடிப்பு தினம்.. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு..மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவர்களால் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. எனவே டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவையில் மட்டும் சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அதிக கூட்டம் கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிவோரை விசாரித்து அனுப்பினர். மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பயணிகளின் பைகளும் உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது. இது தவிரக் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் என முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கே வரும் பக்தர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர். கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமின்றி தமிழகம் முழுக்க பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் கடந்த 3 தினங்களாகவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஊர்க்காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை புது பஸ்டாண்ட், ஜங்சன் ரயில் நிலையம், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நெல்லை மேலப்பாளையத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், மேலப்பாளையத்தில் உள்ள கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. எஸ்.டி.பிஐ, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications