உ.பி. சட்டசபை தேர்தல் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் பூலான்தேவி... பாஜக கூட்டணிக்குள் திடீர் குழப்பம்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க., பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக்குள் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட நிஷாத் சமூகத்தை சேர்ந்த வி.ஐ.பி மற்றும் நிஷாத் கட்சி இரண்டுமே இப்போது பா.ஜ.க.வுக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக பீகாரில் 4 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் வி.ஐ.பி. கட்சி, பூலான்தேவியை முன்வைத்து உ.பி. தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
உ..பி., சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள படுபிரயத்தனம் செய்து வருகிறது.
ஏன் என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கலை? பாஜக மீது உ.பி. கூட்டணி கட்சி தலைவர் பாய்ச்சல்
இந்த நிலையில் பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விகஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி), நிஷாத் கட்சி இரண்டுமே மிகப் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளன. பீகாரில்தான் வி.ஐ.பி. கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.
முகேஷ் சஹானி
பீகார் சட்டசபையில் 4 எம்.எல்.ஏக்களை கொண்ட வி.ஐ.பி. கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி அமைச்சராகவும் உள்ளார். பீகார் அமைச்சரான முகேஷ் சஹானிதான் இப்போது உ.பி. பாஜக அரசுக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
நிஷாத் சமூகம்?
உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் 14% நிஷாத் சமூக மக்கள் உள்ளனர். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சுமார் 70 தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். கங்கை நதிக்கரையோரம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள்தான் இந்த நிஷாத் சமூகம்.
பாண்டிட் குயின்
இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான் பாண்டிட் குயின் என அழைக்கப்பட்ட பூலான்தேவி. சம்பல் பள்ளத்தாக்கில் தாக்கூர்களின் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி சம்பல் பள்ள்ளத்தாக்கு கொள்ளைக்காரி என முத்திரை குத்தப்பட்டவர் பூலான்தேவி. 1981-ல் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த 22 பேரை பூலான் தேவி சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எம்.பி.யான பூலான்தேவி
பின்னர் போலீசில் சரணடைந்து சிறைவாசம் அனுபவித்து விடுதலையானார்.. இதையடுத்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு லோக்சபா எம்.பி.யானார் பூலான்தேவி. 2001-ம் ஆண்டு டெல்லியில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் பூலான்தேவி.
பூலான்தேவி சிலைகள்
அந்த பூலான்தேவிதான் இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் உ.பி. சட்டசபை தேர்தல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறார். பூலான்தேவிக்கு உ.பி. மாவட்டங்களில் பிரமாண்ட சிலைகள் வைக்கப் போகிறேன் என பீகாரில் இருந்து புறப்பட்டு வந்தார் விகஷீல் இன்சான் கட்சி தலைவரும் பீகார் அமைச்சருமான முகேஷ் சஹானி. ஆனால் அவரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது உ.பி. பாஜக அரசு. இப்போது உ.பி. தேர்தலில் தமது கட்சி தனித்தே 165 இடங்களில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும். உ.பி.யில் எப்படியும் பூலான்தேவி சிலைகளை நிறுவியே தீருவோம் என சூளுரைத்துக் கொண்டிருக்கிறார் முகேஷ் சஹானி. அத்துடன் பீகார் மாநிலத்திலும் தமது கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார் முகேஷ் சஹானி. கடந்த திங்கள்கிழமையன்று பாட்னாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் முகேஷ் சஹானி பங்கேற்காமல் புறக்கணித்திருந்தார்.
துணை முதல்வர், 160 சீட்
இது ஒருபுறம் இருக்க இன்னொரு பாஜக கூட்டணியாக நிஷாத் கட்சி முன்வைக்கும் நிபந்தனைகளும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. நிஷாத் கட்சியின் தலைவரான சஞ்சய் நிஷாத், உ.,பி.யில் துணை முதல்வர் பதவி தரவேண்டும்; 160 தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். சஞ்சய் நிஷாத் மகன் லோக்சபா எம்.பி.யாக இருக்கிறார். அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மகனுக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனார். இப்படி 2 நிஷாத் சமூக கட்சிகளும் பாஜகவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதை டெல்லி மேலிடமும் விரும்பவில்லையாம். ஏற்கனவே உ.பி.யில் அதிருப்தியில் இருக்கும் பிராமணர் வாக்குகளை அறுவடைய செய்ய பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் என போட்டி போட்டு வேலை செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.