உ.பியில் கோசாலைகளை பராமரிப்பதில் நிதி சிக்கல்.. சாராயத்தின் விலை உயர்வு
லக்னோ:உபியில் கோசாலை நிதிக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மதுபானங்களுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் வசூலிக்க முதல்வராக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. இவர் தான் அடுத்த மோடி என்றும்.. 2019ம் ஆண்டின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கவே.. உ.பியில் அவர் முதல்வராக அமர வைக்கப்பட்டார் என்றும் கூட பேச்சுகள் கிளம்பின.
அதுபுறம் இருக்க...எதை பற்றியும் கவலைப்படாமல் மற்றொரு புதிய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் யோகி. அதுதான்.. கோசாலை நிதிக்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளி நாட்டு மதுபானங்களுக்கு கூடுதல் சிறப்புக் கட்டணம் வசூலிப்பது.
அமைச்சரவையில் முடிவு
இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூடி முடிவும் எடுத்துள்ளது. இது குறித்து உ.பி மாநில செய்திதொடர்பாளரும் மின்துறை அமைச்சருமான ஸ்ரீகாந்த் சர்மா கூறும்போது, அரசின் இந்த நடவடிக்கையால் ஆண்டுக்கு ரூ.165 கோடி வருவாய் கிடைக்கும். இந்த தொகை உபி மாநிலத்தின் பசுக்களுக்கான பாதுகாப்பு கோசாலைகளில் பயன்படுத்தப்படும்.
அதிக கட்டணம்
ஒரு மதுபாட்டிலுக்கு 50 காசுகள் முதல் 2 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். இதே பாட்டில்களை உபி அரசின் அனுமதிபெற்ற மதுபான விடுதிகளில் அருந்துவோரிடம் இருந்து கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்யப்படும் என்று கூறினார்.
அதிகரித்த நிதிச்சுமை
கடந்த கால ஆட்சியான அகிலேஷ்சிங் யாதவ் தலைமையில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசிற்கும் நிதிச்சுமை ஏற்பட்டிருந்தது. அப்போது அதை ஈடுசெய்யும் வகையில் மதுபாட்டில்களுக்கு இரண்டு சதவிகிதம் கூடுதல் வரி விதித்திருந்தார்.
பசுக்கள் மீதான கவனம்
ஆட்சியில் அமர்ந்தது முதல் பாஜகவானது பசு பாதுகாப்பு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக உ.பியில் சில மாதங்களாக ஆதரவின்றி சாலை மற்றும் தெருக்களில் திரியும் பசுக்கள் அரசு அலுவலகங்கள். பள்ளி வளாகங்களில் அடைக்கப்பட்டு வருகிறது.
பற்றாக்குறை நிதி
அரசு மற்றும் பொதுநல அமைப்புகள் நடத்தும் கோசாலைகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை ஈடுகட்டவும், பசுக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும்,யோகியின் இந்த புதிய நடவடிக்கை மதுப்பிரியர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.