வன்முறை.. கலவரத்தின்போது.. ஜாதி, மத பாகுபாடின்றி பாயும் நடவடிக்கை.. இதுதான் பாஜக - யோகி ஆதித்யநாத்
லக்னோ: வன்முறை, கலவரத்தின்போது ஜாதி, மத பாகுபாடின்றி பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடரும் எனக்கூறிய உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. 2வது முறையாக யோகி ஆதித்யாத் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் அங்கு தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக புல்டோசர் நடவடிக்கையை கூறலாம். அதாவது தவறு செய்யும் நபர்கள் அரசு நிலத்தில் குடியேறி இருப்பது அல்லது அனுமதியின்றி வீடு கட்டியிருந்தால் அந்த வீடு இடித்து அகற்றப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒருசேர உள்ளன.
இத்தகைய சூழலில் தான் உத்தர பிரதேசத்தில் கலவரம் செய்வோர், வன்முறையாளர்கள் மீது பாஜக அரசு சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை என்பது வரும் காலத்திலும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவ் மாவட்டம் கோசியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் பேசியதாவது:
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியினருக்கு அந்த கட்சியின் நலனே முக்கியமானதாக உள்ளது. அவர்கள் மாநிலத்தின் நலனை கருத்தில் கொள்வது இல்லை. சட்டசபை தொகுதிகளை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் வைத்து கொள்வது இல்லை. மாவ் மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியவர்கள் மீது பாஜக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
2005ல் மாவ் மாவட்டத்தில் கலவரத்தை(துர்கா பூஜை ஊர்வலத்தில் கலவரம்) நேரில் பார்த்தவர்களுக்கு இது புரியும். அப்போதைய சமாஜ்வாதி கட்சியின் அரசு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் இருந்து தவறிவிட்டது. கலவரக்காரர்கள், வன்முறையாளர்களுக்கு எதிராக ஜாதி, மத வேறுபாடின்றி தீர்க்கமான நிலைப்பாட்டை பாஜக அரசு எடுத்தது. தொடர்ந்து அதனை செய்தும் வருகிறது.
எங்கள் அரசு என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கான வளர்ச்சியை நோக்கி பணியாற்றி வருகிறது. முந்தைய காலத்தில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களுக்கு சமாஜ்வாதி கட்சி தடை விதித்துள்ளது. அதோடு ராமர் கோவில் கட்டுவதில் நாம் ஆர்வமாக இருந்தபோது அவர்கள் ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications