பிராமணர்களுக்கான பாதுகாப்பு- உ.பி. அரசை விமர்சிக்கும் பாஜக எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு யோகி வார்னிங்
லக்னோ: பிராமணர்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசை விமர்சிக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு பிராமணர்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அமோக வெற்றியைப் பெற்ற பாஜக, பிராமணருக்கு முதல்வர் பதவி தராததில் தொடங்கியது சர்ச்சை.

அடுத்தடுத்த தேர்தல்களின் போது பிராமணர்களுக்கு முன்னுரிமை தருவோம் என்பது மட்டும் பாஜகவின் வாக்குறுதி. ஆனால் நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற கோபத்தில் இருக்கின்றனர் உ.பி. பிராமணர்கள்.
இதன் உச்சமாக நிழல் உலக தாதாவான, பிராமணர் ஜாதியை சேர்ந்த விகாஷ் துபே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீதான பிராமணர்கள் கோபம் உக்கிரமடைந்தது.
இதனை காங்கிரஸ் கட்சி தற்போது அறுவடை செய்து வருகிறது. 2022-ல் மாநில சட்டசபை தேர்தலில் பிராமணர் ஒருவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என இப்போதே கூறி வருகிறது காங்கிரஸ். அத்துடன் பாஜகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் பிராமணர் பாதுகாப்பு விவகாரத்தை முன்வைத்து யோகி அரசை சாடி வருகின்றனர்.
இதில் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டத்தில் கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் விமர்சனங்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது; இப்படியான போக்கை கைவிடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications