ஆசன வாயில் லத்தியை சொருகி எலெக்ட்ரிக் ஷாக்.. பசுவதை புகாரில் இஸ்லாமியரை வதைத்த உபி போலீஸ்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பசுவதை வழக்கில் கைதான நபரின் ஆசனவாயில் லத்தியை சொறுகி எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து காவல் நிலையத்தில் போலீசார் துன்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் புதான் மாவட்டத்தில் 22 வயது இஸ்லாமிய இளைஞரை போலீசார் பசுவதை வழக்கில் கைது செய்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கக்ரலா பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பகுதி நேரமாக காய்கறி விற்பனை செய்து வந்திருக்கிறார்.

இளைஞர் கைது
இந்த நிலையில் கடந்த மே 2 ஆம் தேதி அவர் பசுவதையில் ஈடுபட்டதாக அலபூர் காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோத காவலில் வைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் சத்ய பால் தலைமையிலான 4 காவலர்களுடன் சேர்ந்து வெளிநபர்களும் இளைஞரை தாக்கியுள்ளனர்.

வலிப்பு நோயால் பாதிப்பு
இது தொடர்பாக இளைஞருடைய அண்ணன் மனைவி கூறுகையில், "2 நாட்களாக குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி போலீசார் கொடூரமாக வதைத்துள்ளனர். தவறான நபரை கைது செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த பிறகு ரூ.100 பணத்தை கொடுத்து வீட்டில் வந்து விட்டனர். அன்றிலிருந்து இவருக்கு வலிப்பு ஏற்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை நிலைமை மோசமான பிறகே மருத்துவமனையில் அனுமதித்தோம்." என்றார்.

லத்தியை சொருகி எலெக்ட்ரிக் ஷாக்
போலீசார் காவல் நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்திருந்தபோது இளைஞரின் ஆசனவாயில் லத்தியை சொருகி துன்புறுத்தியதும், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள சொல்லி எலெக்ட்ரிக் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞரை பரிசோதித்த மருத்துவர், எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்ததால் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

பணியிடை நீக்கம் செய்ய நடவைக்கை
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் பொய் வழக்கு பதிந்தது மற்றும் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் பிரவீன் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இளைஞரை தாக்கிய போலீசாரை பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்துவதற்கான வேலைகள் நடத்து வருவதாக உறுதியளித்துள்ள அவர், இளைஞருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications