உ.பி.: திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன-4 பேர் பலி; 22 பேர் படுகாயம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. தடம் புரண்ட இந்த 12 பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய தகவல்களின்படி இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சண்டிகரில் இருந்து அஸ்ஸாமின் திப்ரூகர் செல்லக் கூடியது சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் (15904). இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சண்டிகரில் இருந்து நேற்று இரவு 11.35 மணிக்குப் புறப்பட்டது. அஸ்ஸாமின் திப்ரூகரை நாளை மறுநாள் சென்றடையும்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் 4 ஏசி பெட்டிகளும் அடங்கும். இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய தகவல்களின் படி இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications