உபி தேர்தல்: களத்தில் மொத்தமாய் குதித்த காங்கிரஸ்.. சோனியா, மன்மோகன், ராகுல்,ப்ரியங்கா பிரச்சாரம்
லக்னோ: உத்திரப் பிரதேசத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரச்சாரத்திற்காக சோனியா காந்தி மன்மோகன் சிங் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்ட முதற்கட்ட பிரச்சாரகர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய வட மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை தவிர மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்தல்களை எதிர்கொள்ளப் போகின்றன.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

உத்திர பிரதேச தேர்தல்
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி.தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சி தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் , இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகிறது.

கட்சிகள் மும்முரம்
தற்போது உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையன் அறிவித்துள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் ஜுரம் தொற்றிக் கொண்டுள்ளது. பிரச்சாரங்கள், வேட்பாளர் தேர்வு என மும்முரம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் பட்டியல்
உத்திரப் பிரதேசத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரச்சாரத்திற்காக முதற்கட்ட பிரச்சாரகர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தி, ஆகியோரது பெயர்கள் முதல் 4 இடங்களில் உள்ளது. மேலும் அஜய்குமார்.,அசோக் கெலாட், பூபிந்தர் சிங் ஹூடா, சச்சின் பைலட், ஹர்திக் படேல் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அடங்கிய 30 பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பாஜகவுக்கு போட்டி
தற்போது வெளிவந்த சில தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உத்தரபிரதேசத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் போட்டியை சமாளிக்க அகிலேஷ் யாதவ் கடுமையாக முயன்று வருகிறார். அதே நேரத்தில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கடந்த தேர்தலில் போல படு தோல்வியை சந்திக்காமல் இந்த முறை கவுரமான தொகுதிகளை வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. சோனியா காந்தி மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பிரச்சாரத்தால் கூடுதல் தொகுதிகளை கைப்பற்ற முடியும் என காங்கிரஸ் நினைப்பதாகவும், அதற்காகவே அடுத்தடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உத்திரப்பிரதேசத்தில் முகாமிட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications