கொரோனா.. தோண்ட தோண்ட பிணங்கள்.. அழுகிய நிலையில் நாய்கள் குதறிய உடல்கள்.. கங்கை நதியில் கொடூரம்!
லக்னோ: உத்தர பிரதேசம், பீகாரில் ஓடும் கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வருவதும், அதை நாய்கள் கடித்து குதறிய சம்பவமும் நாடு முழுக்க அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
மனித குலத்தின் மாபெரும் அவலம்தான் தற்போது உத்தர பிரதேசம் - பீகாரில் நடந்து கொண்டு இருக்கிறது. கனவிலும் கூட யாரும் நினைத்து பார்க்க முடியாத கொடூரம் கங்கை கரையோர கிராமங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் பல கோடி மக்கள் கடவுளாக வணங்கும் புனிதனமான கங்கை நதியில் தினமும் அடுத்தடுத்து பிணங்களாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேசம், பீகார் எல்லையோர கிராமங்களில் கங்கை நதி முழுக்க இதுவரை கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது எல்லாம் கொரோனா பாதிக்கப்பட்டு பலியானவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எப்படி
பீகாரின் புக்சார் மாவட்டத்திலும், உத்தர பிரதேசத்தின் பல்லியா, காசிப்பூர் மாவட்டங்களிலும்தான் இந்த பிணங்கள் கங்கை நதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக இரண்டு மாநிலங்களை இணைக்கும் பல்லியா மாவட்ட எல்லையில் உள்ள பாலங்களில் இருந்து இந்த பிணங்கள் பல கங்கை நதியில் இரவோடு இரவாக தூக்கி வீசப்பட்டு உள்ளன.

கணக்கு
இதுவரை வெளியான அதிகார பூர்வ கணக்கின்படி பீகாரில் 72 பிணங்களும், உத்தர பிரதேசத்திலும் 52 பிணங்களும் இப்படி கங்கை நதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகம் என்கிறார்கள். எல்லா பிணங்களும் அழுகியபடி, முகம் சிதைந்தபடி, மிக மோசமாக சிதிலம் அடைந்து காணப்பட்டுள்ளன.

மோசம்
அதிலும் பல இடங்களில் பிணங்கள் கரை ஒதுங்கி, அதை நாய்கள் கடித்து குதறிய அவலம் கூட உத்தர பிரதேச கிராமங்களில் நடந்துள்ளன. இவை எல்லாம் 5-6 நாட்கள் பழைய உடல்கள். மனித உடல்களை நாய்கள் இப்படி கடித்து குதறும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதெல்லாம் போக கங்கை நதியில் மிதந்து வரும் பிணங்களை தாண்டி, கங்கை கரையிலும் சில பிணங்கள் புதைக்கப்பட்டுள்ள.

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் கங்கை நதி கரையில் நிறைய உடல்கள் இப்படி புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக பெரிதாக குழி தோண்டாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்த உடல்களை புதைத்து உள்ளனர். இங்கு தோண்ட தோண்ட பிணங்களாக வந்ததால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

எப்படி நடக்கிறது
இரவோடு இரவாக ஆம்புலன்சில் வந்து இப்படி பிணங்களை கங்கையில் சிலர் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் உ.பி மக்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்று பீகாரும், பீகார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்று உ.பி தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. இந்த உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கொரோனா
இந்த உடல்கள் கண்டிப்பாக கொரோனா நோயாளிகளின் உடல்களாக இருக்கும் என்பதால் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதோடு இதில் சில உடல்கள் பாதி எரிந்த நிலையில் வீசப்படுவதால், கொரோனா நோயாளிகளுக்கு சவக்கிடங்கில் இடம் கிடைக்காமல், பாதி எரிந்த உடல்களை அவசர அவசரமாக இப்படி வீசி செல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

விளக்கம்
இது தொடர்பாக அரசு விசாரணை நடத்தி வருகிறது, வடஇந்தியாவில் சில ஜாதியினரை மனித உடல்களை இப்படி தண்ணீரில் வீசி இறுதி சடங்கு மேற்கொள்வது வழக்கம். அவர்களின் செயலாக இது இருக்குமா என்றும் விசாரிக்கப்படுகிறது. ஆனாலும் இத்தனை வருடமாக இப்படி கரை ஒதுங்காத உடல்கள் இப்போது ஒதுங்குவதால் கொரோனாதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று வலுவான சந்தேகம் எழுந்துள்ளது.

புனிதம்
புராண காலங்களில் இருந்தே கங்கை நதி மிக புனிதமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் வடஇந்தியர்கள் மத்தியில் கடவுளாக, தாயாக இந்த நதி மதிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நதியில் பிணங்கள் மிதப்பதும், அதை நாய்கள் குதறுவதும்.. இந்திய வரலாற்றிலேயே நினைத்து பார்க்க முடியாத துர்க்கனவாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications