முதல் டோஸ் கோவிட்ஷீல்ட்.. 2வது டோஸ் கோவாக்சின்.. மாற்றி மாற்றி போட்டது அம்பலம்.. உ.பியில் ஷாக்கிங்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்களுக்கு கொரோனா வேக்சின் டோஸ்களை மாற்றி மாற்றி கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே மோசமாக சொதப்பிய மாநிலங்களில் ஒன்று உத்தர பிரதேசம். போதுமான மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் ஒரு பக்கம் கொத்து கொத்தாக நோயாளிகள் பலியானார்கள்.
இன்னொரு பக்கம் அதைவிட கொடுமையாக உடல்களை கூட சரியாக அடக்கம் செய்யாமல், கங்கை நதியில் உடல்களை வீசி எறிந்த கொடுமையும், வற்றிய நதியில் பல நூறு உடலை மணலை போட்டு மூடி விட்டு சென்ற கொடுமையும் கூட யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசத்தில் நடந்தது.
மோசம்
தற்போது அதே உத்தர பிரதேசத்தில் இன்னொரு கொடுமை அரங்கேறி உள்ளது. அங்கு சித்தாநகர் என்ற கிராமத்தில் உள்ள மக்களுக்கு கொரோனா வேக்சின் டோஸ்களை மாற்றி மாற்றி கொடுத்தது அம்பலம் ஆகியுள்ளது. அதாவது முதலில் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் கொடுக்கப்பட்டு பின் இரண்டாவது டோஸாக கோவாக்சின் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மோசம்
மொத்தம் 20 பேருக்கு இப்படி வேக்சின் மாற்றி போடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இந்த தவறு நேர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் வாரம் இவர்களுக்கு ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கோவிட்ஷீல்ட் முதல் டோஸாக கொடுக்கப்பட்டு பின் இரண்டாவது டோஸாக பாரத் பயோ டெக் நிறுவனத்தின் கோவாக்சின் மே 14ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதிகாரிகள்
மக்களுக்கு இந்த வேக்சின் மாற்றிக்கொடுக்கப்பட்ட பின்பே, இந்த தவறு நேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உத்தர பிரதேச சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இது முழுக்க முழுக்க தவறு. ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் செய்த தவறு இது. இதை விசாரிக்க உத்தரவிட்டு உள்ளோம். விளக்கம் கேட்டு இருக்கிறோம்.
சோதனை
வேக்சின் மாற்றி கொடுக்கப்பட்ட நபர்களிடம் அவர்களின் உடல்நிலை குறித்து சோதனை செய்தோம். அவர்கள் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. அவர்களை கண்காணித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால்
ஆனால் வேக்சின் மாற்றி போடப்பட்ட கிராமத்தினரோ, எங்களிடம் எந்த அதிகாரியும் உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை. வேக்சினை மாற்றி போட்டபின் இவர்கள் ஊர் பக்கமே வரவில்லை. ஒருவர் கூட எங்களிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை சந்தித்தது. யோகி ஆதித்யநாத் இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். இப்படிப்பட்ட நிலையில் வேக்சின் போடுவதில் கூட இவ்வளவு பெரிய தவறு நடந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.