திருக்குர்ஆனில் ஹிஜாப் அணிய கூறப்பட்டுள்ளது! சீருடையை தவிர்க்கவில்லையே: ஹைகோர்ட்டில் அனல்பறந்த வாதம்
பெங்களூர்: ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு விசாரணையை பிப்.,14க்கு கர்நாடக ஐகோர்ட் ஒத்திவைத்தது. அதே நேரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த ஐகோர்ட், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், வழக்கு முடியும் வரை மாணவர்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வர தடை விதித்தும் உத்தரவிட்டது.
கர்நாடகத்தில் உள்ள சில கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணா தீக்சித் விசாரித்தார். 3 பேர் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் (தனிஅமர்வில் வழக்கை விசாரித்த நீதிபதி), ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இரு மூத்த வக்கீல்கள்
மனுதாரர்களான மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, தேவ்தத் காமத் ஆஜராகினர். வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே வாதத்தை துவக்கினார். அவர் வாதாடுகையில், ‛‛கர்நாடக கல்வி சட்டப்படி, பியு கல்லூரிகளுக்கு யுனிபார்ம் கிடையாது. இதற்காக சட்டம் கிடையாது. அபராதம் விதிக்கவும் விதிகள் இல்லை. யுனிபார்ம் குறித்த விதிகள் இல்லாத போது அதை காரணம் காட்டி மாணவிகளை தடுப்பது தவறான விஷயம். இதனால் மாணவிகளின் படிப்பு பாதிக்கப்படும். இதில் அரசு கவனமான முடிவெடுக்க வேண்டும்.

அரசியல் சாசன உரிமை
சீருடை அணிய வேண்டும் என அரசின் உத்தரவு தவறானதாக உள்ளது. தனியார் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்கள் ஸ்கார்ப் அணியலாம் என கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் எடுத்து கொண்டு இடைக்கால தடை உத்தரவு பிறக்க வேண்டும். அரசியல் சாசன உரிமைகள் அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒன்றுதான். அதை மாற்ற முடியாது. இது ஒரு மத நடைமுறை மட்டுமல்ல, அத்தியாவசிய கல்வி உரிமைகளுக்கான வழக்கு. இது ஒரு பெண்ணின் அடையாளம் மற்றும் கண்ணியம் பற்றிய கேள்வி தொடர்பான வழக்கு'' எனக் கூறினார்.

அரசு விளையாடுகிறது
இதேபோல் வழக்கறிஞர் தேவ்தத் காமத்தும் மாணவிகளுக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவுகளை மேற்கொள்காட்டி வாதங்களை முன்வைத்தார். அவர் வாதிடுகையில், மாணவிகள் தொடர்ந்து அதே நிறத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு செல்லட்டும். அரசு நெருப்புடன் விளையாடுகிறது. இது சீருடைப் பிரச்சினை அல்ல. மாணவர்கள் சீருடை அணிந்திருந்தனர். அவர்கள் ஒரே நிறத்தில் தலையில் ஹிஜாப் அணியதான் விரும்பினர். தலையில் ஹிஜாப் அணியக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது அவர்களின் மத கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இது ஒரு தீங்கில்லாத நடைமுறை.

திருக்குர்ஆன்
'பர்தா அவசியம் இல்லை ஆனால் தலையை ஹிஜாப்பால் மூடுவது கட்டாயமாகும்' என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. புனித குர்ஆனின் 24.31 வசனத்தில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. "பர்தா அவசியம் இல்லை, ஆனால் ஹிஜாப்பால் தலையை மூடுவது கட்டாயமாகும் என்று முஸ்லிம் அறிஞர்களிடையே கிட்டத்தட்ட ஒருமித்த கருத்து உள்ளது" என்று அஜ்மல் கான் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு காமத் வாதிட்டார்.

மத அடையாளங்கள் வேண்டாம்
வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‛‛பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்க வேண்டும். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகளை மாணவர்கள் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது. மாணவர்கள் பிரச்னைகளில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும். வழக்கு விசாரணை பிப்.,14க்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என கூறினர்.












Click it and Unblock the Notifications