"மாஸ் சூசைட்!" கோயில் மீது கை வைத்தால் அவ்வளவு தான்.. பொங்கி எழும் இந்து அமைப்பினர்.. பரபர தகவல்
லக்னோ: சுமார் 250 ஆண்டுகள் பழமையான சாமுண்டா தேவி கோவிலை இடமாற்றம் செய்ய ரயில்வே நோட்டீஸ் வழங்கி உள்ள நிலையில், இந்து அமைப்பினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரயில் நிலைய வளாகம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்த ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவில் உள்ளது.
இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதனிடையே இந்த கோயிலை வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பாக ரயில்வே துறை மற்றும் இந்து அமைப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறை
இந்த விவகாரம் முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தான் தொடங்கியது. அப்போது தான் கோட்ட ரயில்வே மேலாளர் ஆனந்த் ஸ்வரூப், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருக்கும் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றும்படி கோவில் அதிகாரிகளுக்கு அன்று நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த நோட்டீஸில், "பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால், கோவிலை மாற்ற வேண்டும். கோவிலை அகற்றாவிட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டு இருந்தது.
இந்து அமைப்புகள்
இதற்கிடையே கோவிலுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆர்வலர்கள் களமிறங்கி உள்ளனர். அவர்கள் ரயில்வே துறையினர் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
200 ஆண்டுகள் பழமையானது
இது தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந் மஹந்த் வீரேந்திர ஆனந்த், கூறுகையில், "இந்தக் கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. நாங்கல் இறந்து விடலாம், ஆனால் இந்த கோவிலின் ஒரு செங்கல்லைக் கூட யாராலும் அசைக்க முடியாது. 200 ஆண்டுகளாக இந்த கோயில் இங்கு இருந்தது என்று ரயில்வே துறைக்குத் தெரியாததா என்ன. தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வருகிறார்கள்" என்றார்.
தற்கொலை
சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை எப்பாடு பட்டாவது பாதுகாப்போம் என்றும் இந்த கோயிலை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என்றும் ராஷ்ட்ரிய இந்து பரிஷத் பாரத் அமைப்பின் தேசிய தலைவர் கோவிந்த் பராஷர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஒரு சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அனைத்தையும் தாண்டி ரயில்வே நிர்வாகம் கோயிலை இடமாற்றம் செய்தால், அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் இந்து அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தர்காவுக்கும் நோட்டீஸ்
அங்கு அமைந்து இருந்த மசூதியின் ஒரு பகுதி மற்றும் தர்காவை இடமாற்றம் செய்யவும் இதேபோன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தர்காவை பராமரித்து வரும் துஃபைல் கூறுகையில் "நான் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தர்காவுக்கு வருகிறேன். ரயில்வே நிலத்தில் இந்த தர்காவை எப்படிக் கட்ட முடியும்?" திடீரென்று, இப்போது ரயில்வே எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியது. இது அநியாயம். இது தொடர்பாக வழக்கை எதிர்கொள்வோம்" என்றார்.
வழக்கு விசாரணை
அதேநேரம் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளதாக ஆக்ரே ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு வரும் மே 13ஆம் தேதி ரயில்வே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது அனைத்து தரப்பும் தங்கள் ஆதாரங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.