'இந்து' என்பது வார்த்தையல்ல.. அது என்ன தெரியுமா.. உபி. பிரசாரத்தில் ஆவேசமான யோகி ஆதித்யநாத்!
லக்னோ: இந்து என்பது வார்த்தையல்ல, அது எங்கள் கலாசாரத்தின் அடையாளம் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு தீவிர பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் மோடி, இதுவரை டிஜிட்டல் பிரசாரம் செய்துவந்த நிலையில், இன்று உத்தரப்பிரதேசத்தில் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பிரதமர் மோடி
உத்தரகாண்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, உத்தரப்பிரதேச மாநிலம், கன்னுஜ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. ''இந்த குடும்பக் கட்சிகளின் மோசமான கொள்கைகளுக்கு கன்னுஜ் வாசனைத் தொழிற்சாலையும் சாட்சி. அவர்களின் தவறான செயல்களால் இந்தத் தொழிலை இழிவுபடுத்தினர். இந்தத் தொழிலை ஊழலுடன் இணைத்தார்கள். கன்னுஜ் வாசனை திரவியத்தை உலகளாவிய பிராண்டாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்'' என்றார்.
ஜனநாயகம்
ஜனநாயக அரசாங்கம் என்பது மக்கள், மக்களால் மற்றும் மக்களுக்கான அரசாங்கம் என வரையறுக்கப்படுகிறது. நமது நாட்டின் குடும்பக் கட்சிகள் ஜனநாயகத்தின் இந்த சாரத்தை மாற்றிவிட்டன. அவர்களின் மந்திரம் என்பது அரசாங்கம், குடும்பத்தால் மற்றும் குடும்பத்திற்காக இருப்பது'' என்று குடும்ப அரசியல் கட்சிகளை சாடினார் பிரதமர் மோடி.
யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது கட்டப் பிரச்சாரத்துக்காக மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ''காங்கிரஸ் நிலையும் அவர்கள் பயணிக்கும் பாதையும் பாதகமாகவே இருக்கிறது. எந்த இடத்திலும் சாதகமே இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்த நாட்டை ராகுல் காந்தி அவமதித்து விட்டார்.
இந்து
மாநிலம் முழுவதும் தாமரை மலரும். தற்செயலாக இந்து என்று கருதியவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஒருபோதும் இந்து பெருமை தெரியாது. இந்து என்பது வெறும் வார்த்தை இல்லை, அது எங்கள் கலாசாரத்தின் அடையாளம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.