உ.பி. தேர்தல்: யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக போட்டியிட தயார்: பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சவால்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து தாம் போட்டியிட தயார் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் சவால் விட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன.
2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 47 இடங்களைப் பெற்று இருந்தது பாஜக. ஆனால் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 312 இடங்களைப் பெற்று அமோக வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

பாஜகவுக்கு வாய்ப்பு?
உ.பி.யில் கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கடும் அதிருப்தி நிலவுவதாகவும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பாஜக கணிசமான இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். உ.பி.யில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக படுதீவிரமாக உள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் பட்டாளத்தையே களமிறக்கி இருக்கிறது பாஜக.

மோடி, அமித்ஷா வியூகம்
மேலும் பிரதமர் மோடி அண்மையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உ.பி.யில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை உ.பி.யில் முகாமிட்டு தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை சிறிய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரிந்து நிற்கின்றன. எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பதால் பாஜகவுக்கே தேர்தல் களம் சாதகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

களத்தில் சந்திரசேகர் ஆசாத்
இந்நிலையில் தலித்துகளின் வாக்குகளை அறுவடை செய்ய அதாவது மாயாவதியின் வாக்கு வங்கியை குறி வைத்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தேர்தலில் களமிறங்கி உள்ளார். இந்த தேர்தலில் தாம் முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் எனவும் சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார். இது தொடர்பாக என்.டி.டி.விக்கு சந்திரசேகர் ஆசாத் கூறியதாவது: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்தேன். ஆனால் அப்போது நான் கட்சியை தொடங்கவில்லை. மாயாவதியின் வேண்டுகோளை ஏற்று அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்தேன். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக அந்த ஆதரவை தெரிவித்தேன்.

யோகி ஆதித்யநாத்தை வீழ்த்த போட்டி
இந்த தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெற்றி பெற விடப் போவது இல்லை. எனக்கு தேர்தலில் வெற்றி தோல்வி முக்கியம் இல்லை. யோகி ஆதித்யநாத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் இலக்கு. அதனால்தான் அவர் அயோத்தியில் போட்டியிட்டாலும் சரி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சரி அவரை எதிர்த்து போட்டியிடுவேன். தலித்துகள், இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை நாங்கள் வாய்ப்புள்ள இடங்களில் வேட்பாளர்களாக களமிறக்குவோம்.

யோகி போட்டியிடுவாரா?
என்னைப் பொறுத்தவரையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரை தோற்கடிப்பதுதான் முக்கியம். நான் இந்த போட்டியில் இருந்து விலகி ஓடப் போவது இல்லை. எங்களுடைய ஆதரவை எந்த ஒரு கட்சியாலும் விலைக்கும் வாங்கிவிட முடியாது. இவ்வாறு சந்திரசேகர் ஆசாத் கூறியுள்ளார். உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், தற்போது சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். யோகி ஆதித்யநாத் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications