காற்று மாசுக்கு ஃபுல் ஸ்டாப்! உத்தரப் பிரதேச அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.. பொதுமக்கள் வரவேற்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு மானியத்தை அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 4100 பேருக்கு மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதை படிம எரிபொருள் கொண்டு இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டால் அது நாடு முழுவதற்கும் வழிகாட்டுதலாக அமையும். எனவே இந்த திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார்.

இப்படி இருக்கையில், இன்று ஒரே நாளில் 4,100 நபர்களுக்கு மானிய தொகை விடுவிக்கப்படுகிறது. இது குறித்து ஆதித்யநாத் கூறுகையில், "2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதிக்கு பிறகு உத்தரப் பிரதேசத்தில் மின்சார வாகனங்களை வாங்கியவர்கள் மானிய தொகையை பெற தகுதியுடையவராவார்கள். இதில் மூன்று சக்கர் மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களை வாங்கியவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல எலெக்ட்ரிக் பைக் வாங்கியவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும்.
முதல் இரண்டு லட்சம் வாகனங்களை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்குதான் இந்த மானியம் கிடைக்கும். அதன் அடிப்படையில் இன்று ஒரே நாளில் 4,100 பேருக்கு மானியம் விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதன் மூலம் கார்பன் உமிழ்வை கட்டுக்குள் கொண்டுவரலாம்" என்று கூறியுள்ளார். மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுவதற்கு அம்மாநில மக்கள் பரவலாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications