வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம் - கொரோனாவால் பல மாநிலங்களில் களையிழந்தது
நாடு முழுவதும் வண்ணமயமான பண்டிகையான ஹோலிப்பண்டிகை களைகட்டியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னௌ: வண்ணமயமான பண்டிகையான ஹோலிப்பண்டிகை இன்று நாட்டின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. ஏராளமானோர் பல வண்ணப்பொடிகளை தூவி உற்சாகமாக ஹோலி கொண்டாடி வருகின்றனர். சென்னையில் வட இந்திய மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை அடுத்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை பக்த பிரகலாதன் கதையுடன் தொடர்புடையது.
அரசுன் இரணியகசிபுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் மாயப் போர்வையை வரமாக பெற்றிருந்தாள். அதன் படி ஒரு பெரிய தீ மூட்டி, பிரகலாதனை தனது மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்தாள். அப்போது பிரகலாதன் மகாவிஷ்ணுவை வேண்டியதும் அந்த போர்வை பறந்து பிரகலாதனை மூடிக்கொண்டது. ஹோலிகா நெருப்பில் கருகி உயிர் விட்டாள். தீயிலும் பிரகலாதன் சாகாமல் இருப்பதைப் பார்த்த மக்கள் பிரகலாதனைப் போற்றினர்.
அரக்கி ஹோலிகா தகனம்
இந்த ஹோலி பண்டிகைக்கு முன் தினம் தான் ஹோலிகா தகனம் என தீமூட்டி கொண்டாடப்படுகிறது. இப்படி தீங்கிழைக்க நினைத்த ஹோலிகா தீயில் பலியானதை ஹோலி என கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஏராளமானோர் நெருப்புகளை மூட்டி ஹோலி கொண்டாடினர்.
மன்மதனை எரித்த சிவன்
சிவ பெருமான் காம தகனம் எனப்படும் மன்மதனை நெருப்பால் அழித்ததைத் தான் இன்றும் ஹோலிப் பண்டிகையின் போது தீ மூட்டி கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
கோபியர்களுடன் விளையாடிய கண்ணன்
ராதா கிருஷ்ணன் காதல் கதையோடும் இந்த ஹோலி கொண்டாடப்படுகிறது. அதே போல கோபியர்கள் கண்ணனுடன் விளையாடியதையும் ஹோலியாக கொண்டாடுகின்றனர். இன்றைக்கும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள பர்சானா எனும் மாவட்டத்தில் ஆண்களைப் பெண்கள் தடியால் அடித்து ஹோலி கொண்டாடும் விநோத முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு லத்மார் ஹோலி என்று பெயர். இந்த ஹோலி கொண்டாட்டத்திற்கு அப்பகுதி மக்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே தயாராகி விடுகின்றனர். இந்தக் கொண்டாட்டம் பர்சானா மாவட்டத்தில் இருக்கின்ற பிரபல ராதா ராணி கோவிலில் இருந்து துவங்கப்படுகிறது.
உற்சாக கொண்டாட்டம்
கண்ணனை ராதையும் அவள் தோழிகளும் கட்டையால் அடித்து விரட்டியதை குறிக்கும் வகையில் ஆண்களை பெண்கள் விரட்டி விரட்டி அடிக்கும் இந்த வகை விளையாட்டுகள் அங்கு பிரசித்தம். உற்சாகமான கேலி கிண்டலுடன் ஆண்கள் பெண்களிடம் சிக்கித் திணறுவதும் ஹோலியின் குதூகலத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
களையிழந்த ஹோலி பண்டிகை
பண்டிகை என்றாலே குதூகலமும் கொண்டாட்டமும்தான். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு எந்த பண்டிகையும் கொண்டாட முடியாமலேயே கடந்து போனது. இப்போது மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் பல மாநிலங்களில் ஹோலி கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகின்றன. மகராஷ்டிரா, டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் வண்ணமயமான ஹோலி பண்டிகை களையிழந்துள்ளது.