உத்தரப்பிரதேசத்தை கலங்க வைத்த விகாஸ் துபே யார்.. பின்னணி என்ன?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 போலீசாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றவாளி விகாஷ் துபே சாதாரணமான குற்றவாளி கிடையாது. இவர் மீது இதுவரைக்கும் 60 வழக்குகள் உள்ளன.
Recommended Video
தற்போது போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்ற இவர், இதற்கு முன்பு தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சரையே சுட்டுக் கொன்றுள்ளார்.
சினிமாவில் வருவதைப் போன்று, 2001ஆம் ஆண்டில் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அங்கு இருந்த அப்போதைய அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை சுட்டுக் கொன்றார். இதேபோல் 2000ஆம் ஆண்டில், தாராசந்த் இன்டர் கல்லூரின் உதவி மேலாளரை சிவ்லி போலீஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றார். அதே ஆண்டில் மற்றொரு கொலை வழக்கும் இவர் மீது பதிவு செய்யப்பட்டது.
2004ஆம் ஆண்டில் சிறையில் இருந்தவாறு தனது உறவினரை திட்டமிட்டு கொன்றார். இந்த வழக்கில் விகாஸ் துபேவை சுட்டுக் கொல்லப்பட்ட அனுராக்கின் மனைவி விகாஸ் மீது குற்றம்சாட்டி இருந்தார்.
கொலை, கொள்ளை, கடத்தல் மட்டுமில்லை. நில ஆக்கிரமிப்பிலும் கில்லாடியாக இருந்த விகாஸ் 2002ஆம் ஆண்டில், கான்பூர் வரை தனது எல்லையை விரிவுபடுத்தி நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டார். பிலாவூர், ரின்யான், சவ்பேபூர் ஆகிய இடங்களில் இடம் வாங்கிக் குவித்தார்.
சவ்பேபூரில்தான் கடந்த வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் விகாஸ் ஈடுபட்டார். இவருக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் செல்வாக்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோதே, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி நகர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
"சத்தியமா விடவே கூடாது".. சாத்தான்குளம் கொடுமைக்காக ரஜினியின் ரியாக்ஷன்.. வாசகர்கள் கருத்து இதுதான்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீஸ் குழு வியாழக்கிழமை இரவு சென்றது. இந்தக் குழுவில் 25 போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
விக்ரு கிராமத்தில் ஒரு வீட்டில் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் குழு அங்கு சென்றது. போலீஸ் குழு கிராமத்துக்குள் நடந்து வராத வகையில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொக்லைன் வாகனத்தை விகாஸ் திட்டமிட்டே நிறுத்தியுள்ளார். போலீசார் நடந்து செல்லும்போது, அங்கு பதுங்கி இருந்த விகாஸ் துபே துப்பாக்கியால் தனது குழுவினருடன் இணைந்து சுட்டுள்ளார். இதன் பின்னர் காட்டு வழியில் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர மிஸ்ரா உட்பட 8 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விகாஸ் துபேவுக்கு போலீசார் செல்வது குறித்து முன்னரே தகவல் கொடுத்த ஸ்டேஷன் போலீஸ் அதிகாரி வினய் திவாரி பணியில் இருந்து தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். விகாஸ் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்ய இந்த திவாரி மறுப்பு தெரிவித்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி போலீசாரை தன வசம் செய்து காரியங்களை சாதித்து வந்த விகாஸ் துபேவை பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.