லக்கிம்பூர் படுகொலை: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தியது உறுதியானது!
லக்னோ: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் கார் மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தியதை தடயவியல் துறை உறுதி செய்துள்ளது. ஆனால் ஆஷிஸ் மிஸ்ரா லக்கிம்பூர் படுகொலை நடந்த அக்டோபர் 3-ந் தேதிதான் துப்பாக்கிச் சூடு நடத்தினாரா? இல்லையா? என்பது இன்னமும் உறுதியாகவில்லை.
லக்கிம்பூரில் மத்திய அரசின் விவசாய சட்ட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது கார் மோதியது. இதில் 4 விவசாயிகள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.

உச்சநீதிமன்றம் அதிருப்தி
இதனையடுத்து நடந்த வன்முறையில் பத்திரிகையாளர், பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. தொடக்கம் முதலே உத்தரப்பிரதேச அரசின் விசாரணை போக்குக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

துப்பாக்கிகள் பறிமுதல்
இதனால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 10 பேரை உ.பி. போலீசார் கைது செய்தனர். மேலும் பாஜக நிர்வாகி மற்றும் பத்திரிகையாளர் கொலை தொடர்பாகவும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேரிடம் இருந்து கைத் துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது
லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட போது, அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளின் தோட்டாக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஆஷிஸ் மிஸ்ராவின் துப்பாக்கியில் இருந்து ஒரு தோட்டா சுடப்பட்டிருப்பதை தடயவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

துப்பாக்கி சூடு சம்பவம் உறுதியாகவில்லை
ஆனால் அக்டோபர் 3-ந் தேதிதான் விவசாயிகளை படுகொலை செய்யவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது உறுதி செய்யவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள், அக்டோபர் 3-ந் தேதி சம்பவத்தின் போது தாம் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. அதற்கு முன்னர்தான் நடத்தினேன் என ஆஷிஸ் மிஸ்ரா வாதிட்டால் அதற்கான ஆதாரத்தை தர வேண்டியதிருக்கும். அப்படி இல்லை எனில் அக்டோபர் 3-ந் தேதி விவசாயிகள் மீது ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்கிற முடிவுக்கு வர வேண்டியதிருக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications