‛பாஜகவை அசைக்க முடியாது’.. உத்தர பிரதேசத்தில் காலியாகும் ‛இந்தியா’ கூட்டணி.. நியூஸ் 18 சர்வே முடிவு
லக்னோ: ‛இந்தியா' கூட்டணியாக காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் கூட வரும் லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை அசைக்க முடியாது எனவும், அந்த மாநிலத்தில் கட்சிகள் வெல்லும் இடங்கள் தொடர்பான கருத்து கணிப்பு முடிவை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ள மாநிலம் உத்தர பிரதேசம். இங்கு தற்போது பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யாத் உள்ளது. உத்தர பிரதேசத்தில் மட்டும் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியால் எளிதாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும்.

இதனால் தான் ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போதும் உத்தர பிரதேச மாநிலம் என்பது அதிக கவனம் பெறும். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 62 தொகுதிகளில் வென்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், பாஜகவின் கூட்டணி கட்சி ஏடிஎஸ் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி ரேபரேலியில் வென்ற நிலையில் ராகுல் காந்தி கூட அமேதியில் தோற்றார்.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் ‛இந்தியா' கூட்டணியில் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒன்றாக இணைந்துள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பாஜக சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக உத்தர பிரதேசத்தில் நியூஸ் 18 சிஎன்என் சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. அதில் சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்தாலும் கூட உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு தடைப்போட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகளில் பாஜக 77 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக காங்கிரஸ் + சமாஜ்வாதியின் ‛இந்தியா' கூட்டணி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இந்த கருத்து கணிப்பு முடிவு என்பது அதிர்ச்சியளித்துள்ளது.
இந்த நியூஸ் 18 சிஎன்என் கருத்து கணிப்பு என்பது இந்தியாவில் 21 மாநிலங்களில் உள்ள 518 லோக்சபா தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டனர். மொத்தம் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications