'லவ் ஜிகாத்' ஒரு தீவிரவாதம்.. இப்படியே போனால் சனாதனம் அழிந்துவிடும்.. மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!
லக்னோ: தீவிரவாதம் 'லவ் ஜிகாத்' என்ற புதிய அவதாரம் எடுத்து இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் அழிக்கவே'லவ் ஜிகாத்' என்ற பெயரில் சில தீவிரவாத சக்திகள் சதி செய்கின்றன எனவும் அவர் கூறினார்.
லவ் ஜிகாத்துக்கு எதிராக சனாதன தர்மத்தை நம்பும் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது காலத்தின் தேவை.. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடும் சட்டம் தேவை! பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங்!
பாஜக பேசும் 'லவ் ஜிகாத்'
இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு தங்கள் காதல் வலையில் விழ வைத்து, அவர்களை மதமாற்றம் செய்வதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு அவர்கள் 'லவ் ஜிகாத்' என பெயரும் வைத்துள்ளனர். இதனிடையே, கேரளா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறு லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக சில இளைஞர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்த லவ் ஜிகாத்துக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள்
இவ்வாறு லவ் ஜிகாத்துக்கு குரல் கொடுப்பவர்களில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கும் ஒருவர். இதற்கு முன்பு பல முறை அவர் லவ் ஜிகாத்தையும் முஸ்லிம் மதத்தையும் தொடர்புப்படுத்தி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில், லவ் ஜிகாத் குறித்து அவர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸிப்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசி அவர், "ஒருகாலத்தில், தீவிரவாதிகள் துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் கொண்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், பாஜக ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
லவ் ஜிகாத் அவதாரம்
உளவுத்துறை, ராணுவத்தின் திறன்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை முன்பு போல தீவிரவாதிகளால் நிகழ்த்த முடியவில்லை. இதனால் தீவிரவாதம் தற்போது வெவ்வேறு வடிவங்களில் நாட்டுக்குள் நுழைந்துள்ளன. அதில் முக்கியமானது லவ் ஜிகாத். தீவிரவாதம் தற்போது லவ் ஜிகாத் என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கிறது.
சனாதனம் அழிந்துவிடும்
இந்தியாவில் காணப்படும் இந்து தர்மத்தையும், சனாதன தர்மத்தையும் அழிக்கவே தீவிரவாதிகள் லவ் ஜிகாத் மூலமாக சதி செய்து வருகின்றனர். ஆனால், நாம் அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இந்த சதித்திட்டத்துக்கு எதிராக சனாதன தர்மத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் சிறிது அலட்சியம் காட்டினாலும் சனாதன தர்மத்தை லவ் ஜிகாத் அடியோடு ஒழித்துவிடும்" இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.