ஆல்வார் பலாத்கார வழக்கு.. ரொம்பவும் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க... மோடி மீது மாயாவதி தாக்கு
லக்னோ: ராஜஸ்தானின் ஆல்வார் கூட்டு பலாத்கார வழக்கை முன்வைத்து பிரதமர் மோடி கேவலமான அரசியல் செய்வதாகவும் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சாடியுள்ளார்.
ஆல்வார் கூட்டு பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஆளும் ராஜஸ்தான் அரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஆல்வார் வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஆல்வார் வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதனால் அம்மாநில அரசுக்கான ஆதரவை மாயாவதி வாபஸ் பெற வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து மாயாவதி தெரிவித்துள்ளதாவது:
ஆல்வார் பலாத்கார வழக்கை அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். இதை முன்வைத்து கேவலமான அரசியல் செய்கிறார்... முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் தலித்துகள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உனாவாவில் தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர், ரோஹித் வெமுலாவை கொலை செய்தீர்கள்.. இத்தனை கொலைகளுக்கும் பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏன் செய்யவில்லை?
இவ்வாறு மாயாவதி கூறினார்.












Click it and Unblock the Notifications