குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு- பகுஜன் சமாஜ் ம.பி. எம்.எல்.ஏ. சஸ்பெண்ட் - மாயாவதி அதிரடி
லக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய பிரதேச எம்.எல்.ஏ. ரமா பாய் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இச்சட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரும்பப் பெற வேண்டும் என்பது பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு.
இந்நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமா பாய், மத்திய பிரதேசத்தின் டோமோ மாவட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பேசிய ரமா பாய், குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து கருத்துகளை தெரிவித்தார்.
இதையடுத்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, நமது கட்சி கட்டுப்பாடுமிக்க கட்சி. கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனடிப்படையில் மத்திய பிரதேசத்தின் பாதேரியா தொகுதி எம்.எல்.ஏ. ரமா பாய் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரமா பாய் பங்கேற்கவும் தடை விதிக்கப்படுகிறது என அதிரடியாக கூறியுள்ளார்.