நான் பாட்டுக்கு செவனேனு இருந்தேன்..இப்ப வெளியில தல காட்ட முடியல! புலம்பித் தள்ளிய 'ப்ரவுன் ப்யூட்டி'
லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் ருத்ராட்ச மாலை விற்று வந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் இணையத்தில் திடீரென பிரபலமானார். இந்த நிலையில் அதுவே தனக்கு பிரச்சினையாகி விட்டதாகவும், சுதந்திரமாக தன்னால் நடமாட முடியவில்லை என வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இளம் பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

ஆரம்பத்தில் சிகப்பு நிற ஆடையில் பெண் துறவி போலவே காட்சியளித்து அவரை 'பிரவுன் பியூட்டி' என பலரும் சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாக்கினர். பின்னர் அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்துூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்பதும் திருவிழா காலங்களில் ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

அது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பலர் அவருடன் செல்பி எடுக்கவும் வீடியோ எடுக்கவும் துரத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர் முகமூடி அணிந்து ருத்ராட்ச மாலை விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அவரது கண்கள் காட்டிக் கொடுக்க ஈ மொய்ப்பது போல அவரை சுற்றி கூட்டம் மொய்த்ததால் அவரது குடும்பத்தினர் வேறு வழியில்லாமல் முக்காடு அணிவித்து அவரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

இருந்த போதும் விடாமல் துரத்திய செய்தியாளர்கள், யூட்யூபர்கள், ஆண்கள் அவரது முக்காடை விலகி அவர் முகத்தை பார்த்து "ஒரே ஒரு வீடியோ ஒரே ஒரு வீடியோ" என தூரத்தினர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டதால் வேறு வழியின்றி அவர்களது சொந்த ஊரான இந்துருக்கே அவரது பெற்றோர் அனுப்பிவிட்டனர். இந்நிலையில், பாலிவுட்டில் அவர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் உலாவி வருகின்றன.

அதே நேரத்தில் தனது சுதந்திரம் பறிபோய் விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார் மோனலிசா போஸ்லே. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்," இப்போதைக்கு என்னைப் பற்றி எனக்கே தெரியவில்லை. இத்தனை வருடங்களாக நான் அனுபவித்த சுதந்திரத்தை இனிமேல் அனுபவிக்க முடியாது. என்னுடைய வாழ்க்கையை வாழவும் முடியாது. இதுபோன்று நடந்து கொண்டது தவறு" என பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications