உனக்கு எல்லாம் கிளாஸ் எடுக்க முடியாது! 3ம் வகுப்பு தலித் மாணவியிடம் ஆசிரியர் தீண்டாமை.. உ.பி கொடுமை
லக்னோ: சமீப நாட்களாக பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்னர் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த சிறுமிக்கு கல்வி கற்பிக்க முடியாது என்று ஆசியர் ஒருவர் கூறியதாக சிறுமி அழுதுகொண்டே கூறியிருந்தார். இந்த வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், அந்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சொல்லப்படுகிறது.
திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி
யாரு சார் சாதி பாக்குறா?
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாம் தீண்டாமை கொடுமைகளுடன் போராடிக்கொண்டிருப்பது கொடுமையானது என்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர். இப்போ எல்லாம் யாரு சார் சாதி பார்குறா என்கிற கேள்விக்கான விடையை தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ளது. NCRB தரவுகளின்படி, கடந்த 2018-2020 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு எதிராக சுமார் 1,30,000 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
ஒரு நாளைக்கு
அதாவது நாளொன்றுக்கு 1,780 குற்றங்கள், ஒரு மணி நேரத்திற்கு 74 குற்றங்கள். இவையனைத்தும் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. இதில் முதல் இடத்தில் இருப்பது உத்தரப் பிரதேசம்தான். இந்த குற்றங்களின் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய குற்றமும் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பூஜா சிங் எனும் ஆசிரியர் தனது வகுப்பில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி பயில்வதால் சிறுமிக்கு கல்வி சொல்லி தரமாட்டேன் என்று கூறி அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
தீண்டாமை
ஏதும் அறியாத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அழுதுகொண்டே கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதில் கொடுமை என்னவென்றால் தன்னை உயர் சமூகம் என்று கூறிக்கொள்ளும் பூஜா சிங் எனும் ஆசிரியர் சிறுமியை மூன்று மாதங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கவே இல்லை. தான் தாழ்ந்த சமூகத்தினருக்கு கல்வி கற்பிக்க மாட்டேன் என்று ஆசிரியர் கூறியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியில்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியும் கூட தற்போது வரை அந்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என சொல்லப்படுகிறது. நாடு முழுவதும் இப்போதும் கூட கல்வி நிலையங்களில் 'கட்டை விரலை' தானம் கேட்ட துரோணாச்சாரிகள் இருப்பதாக பலர் இந்த வீடியோவின் கீழ் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.