நுபுர்சர்மா பேச்சால் கான்பூரில் வன்முறை! தீவிர விசாரணை! பாஜக பிரமுகர் கைது! கலெக்டர் தூக்கியடிப்பு
லக்னோ: நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கான்பூர் நகர் மாவட்ட கலெக்டர் நேகா சர்மா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி வழக்கு நீதமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தொலைக்காட்சியில் மே 27 ல் விவாதம் நடந்தது.
இதில் பாஜகவின் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்று இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்

நுபுர்சர்மா சஸ்பெண்ட்
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மகாராஷ்டிரா மாநில போலீசில் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நுபுர் சர்மா பேசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து கத்தார், சவுதி அரேபியா, ஈரான் உள்பட முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வெடித்தது வன்முறை
இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை நுபுர் சர்மாவின் பேச்சு எதிர்ப்பு தெரிவித்து கான்பூர் நகர் மாவட்டம் பரடி சவுக் மார்க்கெட்டில் முஸ்லிம்கள் பேரணியாக சென்று கடைகளை மூடும்படி கூறினர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே வன்முறை ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் அவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 51 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முக்கிய நபர் கைது
மேலும் கலவரத்துக்காக ஆட்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கு நிதியுதவி செய்தவர்களின் விபரங்களை சிறப்பு விசாரணை குழுவினர் திரட்டி வருகின்றனர். இதுதொடர்பாக லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் பிரச்சனைக்கு காரணமானவராக கருதப்படும் ஹயாத் ஜாபர் ஹஷ்மி கைது செய்யப்பட்டார். இவரது மனைவி ஜரா ஹயாத்தினிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பாஜக பிரமுகரும் சிக்கினார்
இதற்கிடையே பாஜகவின் யுவ மோர்ச்சாவின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா சமூக வலைதளத்தில் மோதலை உருவாக்கும் வகையில் பதிவுகள் செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், 2 பேஸ்புக், 3டுவிட்டர் கணக்குகளுக்கு எதிராக கோட்வாலி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோதலுக்கு முன்பு சிலர் கலவரத்தை உருவாக்கம் நோக்கத்தில் பெட்ரோலை பாட்டிலில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாட்டிலில் பெட்ரோல் வழங்கிய பெட்ரோல் பம்ப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கலெக்டர் தூக்கியடிப்பு
இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டது. உளவுத்துறை, பாஜகவின் அலட்சியத்தால் தான் வன்முறை நிகழ்ந்ததாக சமாஜ்வாடி கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர் இந்நிலையில் தான் கான்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த நேகா ஷர்மா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் நகர்ப்புற வளர்ச்சி துறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சிறப்பு செயலாளராக பணியாற்றிய விஷாக் ஜி அய்யர் கான்பூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விஷாக் ஜி அய்யர் ஏற்கனவே கான்பூர் நகர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications