சான்ஸே இல்லை.. நாட்டுக்கு சேவையாற்ற விரும்புபவர்கள் அக்னிவீரராக மாட்டார்கள்.. அகிலேஷ் யாதவ் 'சுளீர்'
லக்னோ: நாட்டுக்கு சேவையாற்ற விரும்புபவர்கள் அக்னிவீரர்களாக மாற மாட்டார்கள் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத நிலையில், இந்தக் கருத்தை அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மேலும், அக்னிபாத் திட்டம் கொண்டு வந்ததே இந்திய இளைஞர்களை ஏமாற்றுவதற்காகவே என்றும் அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
சூப்பர் சான்ஸ்! இந்திய விமான படையில் அக்னி வீரராக சேர இளைஞர்களுக்கு வாய்ப்பு.. தகுதி என்ன தெரியுமா?
அக்னிபாத் திட்டமும் வெடித்த போராட்டமும்..
இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு மற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படுவதை போன்ற ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்படாது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறும் போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ராணுவத்தில் முழு நேரமாக பணியாற்ற காத்திருந்த இளைஞர்கள், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் வன்முறைகளும், பொது சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறின.
குறைந்த வரவேற்பு..
இருந்தபோதிலும், இந்த அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு விடாப்பிடியாக செயல்படுத்தியது. முதலில், இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் அதிக அளவில் சேர முன்வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, இந்த திட்டத்துக்கு இளைஞர் மத்தியில் வரவேற்பு குறைந்தது. குறிப்பாக, கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் நடந்த அக்னிபாத் தேர்வுகளில் மிக மிக குறைவாக இளைஞர்கள் பங்கேற்றனர். சில இடங்களில் ஒருவர் கூட இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை.
அகிலேஷ் தாக்கு..
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், "அக்னிபாத் திட்டம் இளைஞர்களையும், இந்த நாட்டையும் சீரழிக்கும் ஒரு மோசடி திட்டம். எனவேதான், அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, அதனை சமாஜ்வாதி கட்சி கடுமையாக எதிர்த்தது. உத்தரபிரதேச இளைஞர்கள் இயற்கையாகவே நாட்டுப் பற்று மிக்கவர்கள். அவர்கள் இந்தியாவுக்கு உயிரை விடவும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் முழு நேரமும் நாட்டை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டுக்கே ஆபத்து..
அப்படிப்பட்ட தேச பக்தர்களை ராணுவத்தில் முழு நேரமாக சேர்க்காமல் தற்காலிகமாக சேர்க்கிறோம் என மத்திய அரசு கூறுகிறது. 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி திரும்பிய பிறகு, இவர்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? தற்போது மத்திய அரசின் இந்த மோசடியை உத்தரபிரதேச இளைஞர்கள் உணர்ந்துவிட்டனர். அதனால்தான், இந்த அண்மையில் நடைபெற்ற அக்னிபாத் தேர்வு முகாமில் இளைஞர்கள் பங்கேற்கவில்லை. அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களை மட்டுமல்ல, நம் நாட்டையை ஆபத்தில் சிக்க வைக்கிறது மத்திய பாஜக அரசு. இதுகுறித்து கேட்டால், நாட்டின் நிதிநிலையை காக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அரசு கூறுகிறது. முதலில் நாட்டை காப்பாற்றினால் தானே நிதியை காப்பாற்ற முடியும்? நாட்டுக்காக உண்மையில் சேவையாற்ற விரும்புபவர்கள், அக்னிவீரர்களாக மாற மாட்டார்கள்" இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.