உ.பி மக்கள் இப்போது எங்கு சென்றாலும் மரியாதையாக பார்க்கப்படுகிறார்கள்.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
லக்னோ: உத்தர பிரதேச மாநில மக்கள் மாநிலத்தை விட்டு இப்போது எங்கு சென்றாலும் மரியாதையாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுகிறார்கள் என்றும் அந்த அளவுக்கு மாநிலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் பல்வேறு அரசு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கவுரவமாக பார்க்கப்படுகிறார்கள்
''கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்தவர்களின் ஜீன்களில் ஊழல் தான் இருந்தது. அவர்கள் அரசு திட்டங்களின் ஒப்பந்தங்களை சொந்த ஒப்பந்ததாரர் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கே வழங்கி ஊழல் செய்து வந்தனர்.இன்று உத்தர பிரதேசத்தில் வசிக்கும் நபர்கள் வெளியில் (அதாவது வெளி மாநிலங்களுக்கு) செல்லும்போது மிகவும் மரியாதையாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படி இல்லை. உத்தர பிரதேச மாநிலத்தை விட்டு வெளியே சென்றால் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழ வேண்டிய சூழல் இருந்தது.

மாநிலம் முன்னேற்றம் அடைந்துள்ளது
குறிப்பாக வெளி மாநிலங்கள் செல்லும் இளைஞர்கள் தங்களது அடையாளத்தை மற்றவர்களுக்காக மறைத்து பயந்து வாழ வேண்டியிருந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் ஆட்சியில் இந்த நிலைமை மாறிவிட்டது. உத்தர பிரதேச மக்கள் இப்போது எங்கு சென்றாலும் மரியாதையாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு மாநிலம் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது உத்தர பிரதேச அரசு குற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் சகிப்புத்தன்மை இல்லா கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. இது நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்
இதுபோன்ற அரசின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மாநிலத்தில் இப்போது குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதால் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத மாநிலமாக மாறுகிறது. தற்போது கலவரம் இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது. கலவரக்காரகளுக்கு தக்க பாடம் புகட்டிய அரசும் உத்தர பிரதேச அரசு தான்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது
இதேபோல் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக அவரது முந்தைய தலைமுறைகளின் சொத்தையும் பறிமுதல் செய்யப்படும் என்று பாடம் கற்பித்த முதல் மாநிலமும் உத்தர பிரதேசம் தான். தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. மேலும் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது'' இவ்வாறு அவர் கூறினார். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியும், 2012 முதல் 2017 வரை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications