ராமர் கோவில் கட்டியது யார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. மக்கள் மத்தியில் உ.பி முதல்வர் யோகி பேச்சு
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இங்கு மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. காங்கிரசும் நம்பிக்கையுடன் இப்போது இருந்தே இதற்கான பணிகளை தொடங்கி விட்டது.

பா.ஜ.க.வின் ஆதிக்கம் இருக்குமா?
இதற்காக காங்கிரசின் பிரியங்கா காந்தி ஏற்கனவே உ.பி.யில் முகாம் முகாமிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னின்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இப்படி எதிர்கட்சிகளின் வேகம் அதிகமாக இருக்க இந்த முறை உ.பி.யில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக...
உ.பி.யில் கொரோனா கோலோச்சிய நேரத்தில் முதல்வர் யோகி அதனை சரியாக கையாளவில்லை என்று மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இப்போதும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக நின்றனர்.

பதிவு செய்து விட்டார்
ஒரு கட்டத்தில் யோகி கண்டிப்பாக அடுத்த முதல்வர் வேட்பாளாராக இருக்க மாட்டார் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. உடனடியாக சுதாரித்த யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து அனைத்தையும் தெளிவாக விளக்கி அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதையும் பதிவு செய்து விட்டார்.

அயோத்தி ராமர் கோவில்
ஒருபக்கம் விவசாயிகளும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக செயல்பட முடிவெடுத்துள்ள நிலையில், எதிர்கட்சிகளும் பலமாக நிற்கின்றன. இதையெல்லாம் சமாளித்து வாக்குகளை அறுவடை செய்ய முதல்வர் யோகியும், உ.பி பா.ஜ.க.வினரும் அயோத்தி ராமர் கோவிலை கையில் எடுத்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அதனை முதன்மையாக வைத்து பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

சிந்தித்து பாருங்கள்
மதுராவில் நேற்று பொதுமக்களிடம் உரையாற்றிய யோகி ஆதித்யநாத் ராமர் கோவிலை வைத்தே பேசினார். ''உங்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி முடிவு செய்வதற்கு முன், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியது யார்? என்று சிந்தியுங்கள். பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இதைச் செய்திருக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 2017-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications