உச்சநீதிமன்றம் பற்றி ‘நோ’ கவலை-உ.பி. கும்பமேளா கடைகளில் உரிமையாளர் பெயரை எழுதுங்க..சாமியார்கள் அடம்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில் அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்கள் பெயர்கள் எழுதி வைக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமியார்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கன்வர் யாத்திரை எனப்படும் புனித நீரை கொண்டு வரும் நிகழ்ச்சிகளின் போது உணவகங்களில் உரிமையாளர்கள் பெயரை எழுத வேண்டும் என்ற உத்தரப்பிரதேச அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில் சாமியார்கள் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்துக்களின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று கும்பமேளா. வட இந்திய மாநிலங்களில்தான் கும்பமேளா நடைபெறுகிறது. ஹரித்வார், காசி உள்ளிட்ட புனித நகரங்களில் இந்த கும்பமேளா நடத்தப்படும்.

கும்பமேளா காலங்களில் ஆண்டு முழுவதும் பொதுவாழ்வில் இருந்து விலகி நிற்கும் பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் நிர்வாண அணிவகுப்பு நடத்தி புனித நீராட ஒன்று திரள்வர். அப்போது சாமியார்கள் குழுக்களிடையே எந்த குழு முதலில் நீராடுவது என்கிற மோதல்களும் வெடிக்கும். ஆனால் எந்த ஒரு மாநில போலீசாரும் சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய அகாடா பரிஷத் (சாமியார்கள் கூட்டமைப்பு) பொதுச்செயலாளர் சுவாமி ஹரி கிரி, கும்பமேளாவில் பங்கேற்பவர்களுக்கு உரிய அடையாள அட்டையை மாநில அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பமேளாவில் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் கும்பமேளா நடைபெறும் இடங்களில் உள்ள உணவகங்களில் கடைகளின் உரிமையாளர்கள் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். கன்வர் யாத்திரையின் போது இப்படி பெயர் எழுத உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் கும்பமேளாவில் பெயர் எழுதித்தான் ஆக வேண்டும். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உத்தரப்பிரதேசம் அலகாபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி முதல் பிப்ரவரி 26-ந் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. கும்பமேளா காலங்களில் புனித நாட்களில் பல்லாயிரக்கணக்கான நிர்வாண சாமியார்கள் புனித நீராடும் நிகழ்ச்சியும் அவர்களிடம் பக்தர்கள் ஆசி பெறும் நிகழ்வுகளும் நடைபெறும்












Click it and Unblock the Notifications