உபி. சட்டசபை தேர்தல்: மூத்த காங். தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவினார் அதிர்ச்சியில் காங்கிரஸ்!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவரான ஜிதின் பிரசாதா, பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பணிகளில் பாஜக இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டது. உத்தரப்பிரதேசத்துக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 30 ஆண்டுகால பணி அனுபவம் பெற்ற மாஜி தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே, தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிக மிக நெருக்கமானவரான அனுப் சந்திர பாண்டேவின் இந்த நியமனம் விவாதங்களை கிளப்பி உள்ளது.

பாஜகவில் ஜிதின் பிரசாதா
இதனையடுத்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் முகங்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா பாஜகவில் இன்று இணைந்தார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அக்கட்சியில் ஜிதின் பிரசாதா இணைந்தார்.

கலகக் குரல் ஜிதின் பிரசாதா
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பிய 23 தலைவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர். இதனாலேயே உத்தரப்பிரதேச காங்கிரஸில் கடும் எதிர்ப்பை ஜிதின் பிரசாதா எதிர்கொண்டார். ஜிதின் பிரசாதாவுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களான கபில் சிபல், குலாம்நபி ஆசாத் ஆகியோர் ஆதரவாக இருந்தனர். மேலும் அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பொறுப்பாளராகவும் ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் ஜிதின் பிரசாதாவுக்கு அக்கட்சியில் நெருக்கடி தொடர்ந்தது.

உ.பி. பிராமணர் முகம்
உத்தப்பிரதேசத்தில் பிராமணர்களை பாஜக ஒதுக்கி வைக்கிறது என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இதனால் உத்தப்பிரதேசத்தில் பாஜக மீது பிராமணர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த பின்னணியில் உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்களின் முகமாகவும் அறியப்படும் ஜிதின் பிரசாதாவை பாஜக கட்சியில் இணைத்துள்ளது என்பது மிக முக்கியமான வியூகமாக பார்க்கப்படுகிறது.

ஜிதேந்திர பிரசாதா மகன்
மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பிரசாதாவின் மகன்தான் ஜிதின் பிரசாதா. 2001-ல் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பணியாற்றினார். 2004 லோக்சபா தேர்தலில் வென்று மத்திய இணை அமைச்சரானார். அப்போதைய அமைச்சரவையில் மிகவும் இளம் வயது அமைச்சராக இருந்தவர் ஜிதின் பிரசாதா. 2009 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்ற ஜிதின் பிரசாதா, 2019 தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications