காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க புது திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து காப்பாற்ற அம்மாநில அரசு 'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' எனும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இன்றும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ளதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் காடுகள், மலைகளை ஒட்டியுள்ள வேளாண் நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க புதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறார்.

'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் விளைபொருட்கள் பாதுகாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1.43 லட்சம் மானியமாக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் வரைவு வேளாண் துறையால் தயாரிக்கப்பட்டு, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க 12 வோல்ட் மின்னோட்டத்துடன் கூடிய சூரிய மின் வேலி அமைக்கப்படும். இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ₹75 கோடியில் இருந்து ₹350 கோடியாக உயர்த்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சோலார் கம்பி வேலி விலங்குகளுக்கு லேசான அதிர்ச்சியைக் கொடுக்கும், அவைகளுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. ஏதாவது ஒரு விலங்கு வேலியைத் தொட்டால் உடேனே சைரன் ஒலிக்க தொடங்கிவிடும். எனவே விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடிவிடும். இதன் மூலம் பயிர்கள் பாதுகாக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications