என் ஜாதி இது தான் போதுமா?... காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி பதில்
Recommended Video
லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஜாதி குறித்து பேசியதாக காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கான 5 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 118 தொகுதிகளுக்கு இன்னும் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில், 59 தொகுதிகளில், 6 வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் மே 12ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. மே 23 ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஏழை ஜாதி
இந்தநிலையில், உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மோடியின் ஜாதி என்ன என்று இப்போது அவர்கள் (காங்கிரஸ்) கேட்க ஆரம்பித்து விட்டனர். மோடிக்கு ஒரே ஜாதி தான் - இந்த நாட்டிலுள்ள ஏழை மக்களுக்குச் சொந்தமான ஜாதி. தங்களை யார் ஏழைகளாக கருதிகிறார்களோ, நான் அவர்களுடைய ஜாதிக்குச் சொந்தக்காரர் என்றார்.

தைரியம் இல்லை
மேலும், தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்கள் என்ன செய்தார்கள். வாஜ்பாய் அரசாங்கத்திற்கு முன்பு வரை, எந்த அரசாங்கத்திற்கும் அத்தகைய முடிவை எடுக்க தைரியம் இல்லை. அணுசக்தி சோதனைக்கான ஒரு முடிவை எடுக்க தைரியம் உங்களுக்கு (காங்கிரஸ்) இருந்ததா. இந்தியா எப்போதும் இத்தகைய திறனைக் கொண்டிருந்தது இல்லை.

அணுசக்தி சோதனை
21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், இந்தியா அணுசக்தி சோதனை செய்தது. கடின உழைப்புடன் நாட்டை கெளரவப்படுத்திய, விஞ்ஞானிகளை நான் வணங்குகிறேன். 1998 ல் இந்த வரலாற்று சம்பவம் நடந்தது. தேசிய பாதுகாப்பிற்கு, வலிமையான ஆட்சி இருந்தால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா பதில்
முன்னதாக, "எனக்கு இப்போ வரைக்கும் மோடி எந்த ஜாதியை சேர்ந்தவர் என்றுகூட தெரியாது. நாட்டில் வேலையின்மை, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் இப்படித்தான் குறிப்பிட்டு நாங்கள் பேசுகிறோமே தவிர, ஜாதியை சொல்லி எங்கேயுமே பேசவில்லை" என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பலரும் கருத்து
2019 நாடாளுமன்றத் தேர்தல், தனிமனித தாக்குதலாக மாறியுள்ளது. ஊழல், வளர்ச்சி பற்றி பேசிய தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் குடும்பத்தைப் பற்றி மோசமாக பேசுகிறார்கள். ஜாதியை பற்றி சொல்கிறார்கள் என்றெல்லாம் சொல்லும்படி ஆகிவிட்டதா என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications