"யோகி ஆதித்நாத்தின் வேற லெவல் ஆட்சி.. உ.பி டாப்பிற்கு வந்துள்ளது.." புகழ்ந்து தள்ளிய ராஜ்நாத் சிங்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்கும் நிலையில், யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பொருளாதாரத்தை இரண்டாவது இடத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10ஆம் தேதி மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் கடந்த சில தேர்தல்களாகவே ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது இல்லை என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 403 இடங்களைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேச சட்டசபையில் ஆட்சி அமைக்கக் குறைந்தது ஒரு கட்சி குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும்.

உத்தரப் பிரதேசம்
அங்கு தற்போது உள்ள யோகி தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஆக்ராவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப் பிரதேச பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். மேலும், கல்வான் மோதல் தொடர்பாக ராகுல் கூறிய கருத்துகளையும் அவர் சாடினார்.

ராஜ்நாத் சிங்
பிரசார கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "கல்வான் மோதலில் 38 முதல் 50 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாகச் சமீபத்தில் ஆஸ்திரேலியா செய்தித்தாளில் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. ராகுல் காந்தி சீனா வெளியிடும் செய்திகளை நம்புகிறார். நமது இந்திய வீரர்களின் தைரியம் மற்றும் வீரம் பற்றி கேள்வி எழுப்புகிறார். அவர் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவது வேதனை அளிக்கிறது.

நாட்டின் இமேஜ்
பாஜக ஆட்சியில் சர்வதேச அளவில் நாட்டின் இமேஜ் மேம்பட்டுள்ளது. 2014 வரை, இந்தியத் தலைவரை யாரும் சர்வதேச மன்றத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இப்போது, இந்தியா சொல்வதை ஒட்டுமொத்த உலகமும் கேட்கிறது. இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை நாம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம். நாட்டிற்குள் இருந்தாலும் வெளியே இருந்தாலும் எதிரிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி நமது வீரர்கள் எப்படித் தகுந்த பதிலடி தந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.

ரவுடிகள்
தொடர்ந்து சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சாடிய அவர், "சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வெறும் அதிகாரத்திற்காகத் தான் போட்டிப் போடுகிறது. ஆனால், பாஜக ஒரு வலுவான தேசத்தைக் கட்டமைக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சியின் போது, ரவுடிகளின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. பாஜக ஆட்சியில் ரவுடிகளின் அட்டூழியம் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போது உத்தரப் பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

சிறப்பான ஆட்சி
உத்தரப் பிரதேசத்தை முதல்வர் யோகி ஆத்தியநாத் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தின் பொருளாதாரம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், அது முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹர்கர் நல் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்கப்படும். நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைக் காக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications