கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் உ.பி.- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனா அதி உச்சமாக பரவி வரும் நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியிருக்கிறது. ஆனால் தங்களது மாநிலத்தில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கிவிட்டது என்கிறார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது சராசரியாக 30 ஆயிரத்தை தாண்டியதாக இருக்கிறது. தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேசம்.

உத்தரப்பிரதேச பாதிப்பு
இதுவரை தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வந்தது. உத்தரப்பிரதேசத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,20,176. ஒருநாள் கொரோனா மரணங்கள் 250ஐ நெருங்கியுள்ளது. உ.பி.யில் மொத்தம் 11,414 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

உச்ச பாதிப்பு ஏன்?
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத மாநிலம். ஆக்சிஜன் பற்றாக்குறை, கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்க படுக்கைகள் பற்றாக்குறை என மருத்துவத் துறை அவலத்தில் இருக்கிறது. இதனால்தான் இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது.

எந்த பற்றாக்குறையும் இல்லையே
தற்போது உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியிருக்கிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆக்சிஜன், படுக்கைகள் என எந்த பற்றாக்குறையுமே இல்லை. 4 ஆண்டுகளில் 32 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை உருவாக்கி இருக்கிறோம். தற்போது 72 ஆக்சிஜன் டேங்கர்கள் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்கின்றன என்றார்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு
லக்னோவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று 52,068 ஆக இருந்து. இது தற்போது 50,627ஆக குறைந்திருக்கிறது. வாரணாசியில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 17,321-ல் இருந்து 16,083 ஆக குறைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications