48 ஆண்டுகள்.. 1975-ல் இந்திரா எமர்ஜென்சி அறிவித்த நாள்- உ.பி.யில் கறுப்பு தினம் கடைபிடிக்கும் பாஜக!
லக்னோ: 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை எனப்படும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட நாளை இன்று உத்தரப்பிரதேச மாநில பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.
1971-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தலில் உ.பி. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்திராவின் வெற்றியை எதிர்த்து ராஜ்நாராயணன், அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் இந்திரா காந்தி வென்றது செல்லாது என 1975 ஜூன் 12-ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அத்துடன் இந்திரா காந்தி அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. அதே கால கட்டத்தில் இந்திரா காந்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் ஜெய்பிரகாஷ் நாராயணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து 1975-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதி இந்தியாவில் அவசரநிலை - எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது. 1971-ல் இந்திரா அரசு கொண்டு வந்த ஒடுக்குமுறை சட்டமான மிசா முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டது. 1976-ல் தமிழ்நாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தாக்குதலுக்குள்ளாகினர். தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எமர்ஜென்சியில் சிறை தண்டனை அனுபவித்தவர்.
நாட்டில் எமர்ஜென்சி 2 ஆண்டுகள் அமலில் இருந்தது. அதன் பின்னர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை விலக்கிக் கொண்டார். 1977-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு ஜனதா அரசாங்கம் அமைந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் தாக்கு பிடிக்கவில்லை.
இந்திரா காந்தி அவசரநிலையை பிறப்பித்த நாளான இன்று உத்தரப்பிரதேச மாநில பாஜகவினர் மாநிலம் தழுவிய அளவில் கறுப்பு தினமாக கடைபிடிக்கின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களையும் பாஜக இன்று நடத்துகிறது. இதேபோல நாட்டின் பல மாநிலங்களில் எமர்ஜென்சியின் 48-வது ஆண்டை நினைவுகூறும் நிகழ்வுகளை பாஜக நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications