பாம்பு கடித்து இறந்த சிறுவனை.. உயிர்பிக்க 3 நாட்களாக பசு சாணத்தில் மூடி வைத்த உறவினர்கள்! ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாம்பு கடித்து இறந்த சிறுவனை மீண்டும் உயிர்ப்பிக்க, சிறுவனின் உடலை 3 நாட்களாக வேப்பிலை மற்றும் பசு சாணத்தில் உறவினர்கள் மூடி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள இட்டர்னி கிராமத்தைச் சேர்ந்த கபில் ஜாதவ் என்ற சிறுவனை, கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி அன்று விஷ பாம்பு கடித்தது. இதனையறிந்த உறவினர்கள் உடனடியாக சிறுவனை உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து சடலத்துடன் வீடு திரும்பிய குடும்பத்தினரிடம், அண்டை வீட்டார்கள் சிலர் மாந்திரீகர்கள் மூலம் கபிலைத் திரும்ப உயிர்ப்பிக்க முடியும் என்று கூறினர். இதை நம்பிய குடும்பத்தினர், மாந்திரீக சடங்குகளுக்காக கபிலின் உடலை மதுராவுக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அந்த முயற்சி தோல்வியடையவே, உடலை மீண்டும் கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
கடைசி முயற்சியாக, கபிலின் உடலை வேப்ப இலைகள் மற்றும் பசுஞ்சாணத்தால் முழுவதுமாக மூடி, கிராமத்திற்கு வெளியே வைத்தனர். அங்கும் மாந்திரீகர்கள் பல சடங்குகளைச் செய்தனர். மூன்று நாட்களாக, குடும்பத்தினரும் கிராம மக்களும் ஒரு மரக்கிளையைக் கொண்டு சிறுவனின் கால்களைத் தட்டி, உயிர் திரும்பும் அறிகுறிகள் தென்படுகிறதா என்று காத்திருந்தனர்.
மூன்று நாட்களாக எந்த அசைவும் இல்லாத நிலையில், வியாழக்கிழமை இரவு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கபிலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை நரேந்தர் ஜாதவ், "வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது," என்று கூறியுள்ளார்.
கூலித் தொழிலாளியான நரேந்தர் ஜாதவ், தன் மகன் கிராம அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான் என்றும், அவனுக்கு மூன்று சகோதர சகோதரிகள் இருப்பதாகவும் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹசயன் காவல் நிலைய ஆய்வாளர் கூறியுள்ளார்.
பாம்பு கடிக்க உடனடி சிகிச்சை மட்டுமே உயிர் பிழைக்க ஒரே வழி. எந்த பாம்பு கடித்தாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு போக வேண்டும். அங்கு கடியின் தீவிரத்தை பொறுத்து மருந்து வழங்கப்படும். நாட்டு மருந்துகள் மூலமாகவோ, பச்சிலை மூலமாகோ பாம்புவிஷத்தை வெளியேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications