பொதுசொத்துகள் சேதம்- சிஏஏ எதிர்ப்பாளர்களிடம் இழப்பீடு பெற தீர்ப்பாயம்: உ.பி. முதல்வர் யோகி ஒப்புதல்
லக்னோ: பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான தீர்ப்பாயங்களை அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் தொடர் கிளர்ச்சிகள் நடைபெற்றன. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நிகழ்ந்தன.

உத்தரப்பிரதேசத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்து துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசோ, வன்முறையாளர்களே துப்பாக்கிச் சூடு நடத்தினர்; போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தவே இல்லை என சாதித்தது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களின் போது பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. பொதுசொத்துகளுக்கான சேதங்களை மதிப்பீடு செய்து அவற்றை போராட்டக்காரர்களிடம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுப்போம் எனவும் அறிவித்தது உத்தரப்பிரதேச பாஜக அரசு.
இதனிடையே இழப்பீட்டு தொகையை சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களிடம் வசூலிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்கான தீர்ப்பாயங்களை லக்னோ, மீரட்டில் அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications