நில அபகரிப்பில் ராமர் கோவில் டிரஸ்ட் சம்பத் ராய்- அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீது பாய்ந்த வழக்கு
லக்னோ: ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகியும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவருமான சம்பத் ராயின் நில அபகரிப்பு மோசடிகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் உட்பட 3 பேர் மீது 15 பிரிவுகளில் உத்தரப்பிரதேச போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிலம் வாங்கியதில் மிகப் பெரிய மோசடி நடந்ததாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது ராமர் கோவிலுக்கான நிலத்தை சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ராமர் கோவில் நிலம் சர்ச்சை
இதில் ராமர் கோவில் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் பெயரும் அடிபட்டது. ஆனால் இந்த புகாரை சம்பத் ராய் திட்டவட்டமாக மறுத்திருந்தார். சந்தை விலைக்குதான் ராமர் கோவிலுக்கான நிலத்தை வாங்கினோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

நில அபகரிப்பு புகார்
இந்நிலையில் பத்திரிகையாளர் வினீத் நரெய்ன் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சம்பத் ராய், அவரது சகோதரர்கள் பிஜ்னோர் மாவட்டத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். வெளிநாடு வாழ் இந்தியரான அல்கோ லகோதி என்பவரின் 20,000 சதுர கி.மீ பரப்பளவிலான கோசாலையை சம்பத் ராயும் அவரது சகோதரர்களும் அபகரித்துக் கொண்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

கொலை மிரட்டல் புகார்
இதையடுத்து சம்பத் ராயின் சகோதரர் சஞ்சய் பன்சால் பிஜ்னோர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். பத்திரிகையாளர் வினீத் நரெய்ன் உள்ளிட்ட 3 பேரிடம் தம் மீதான புகாருக்கு போனில் விளக்கம் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை கொலை செய்வதாக மிரட்டினர் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் மீது 15 பிரிவுகளில் வழக்கு
இந்த புகாரின் அடிப்படையில் வினீத் நரெய்ன் உள்ளிட்ட 3 பேர் மீது 15 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் முதல் கட்ட விசாரணையில் சம்பத் ராய் மற்றும் அவரது சகோதரர்கள் மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் பிஜ்னோர் போலீசார்.












Click it and Unblock the Notifications