உ.பி. ஷாக்: ’ஜெய் பெரியார்” முழக்கத்துடன் பிறந்த நாளை கொண்டாடுவதா? வழக்கு போட்ட பாஜக அரசு!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடியதற்காக 4 தலித்துகள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாள் செப்டமப்ர் 17-ந் தேதி எழுச்சியுடன் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி ஆதரவாளர்கள் கொண்டாடினர். பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
உ.பி. மாநிலம் ஹமிர்பூர் என்ற இடத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை தலித் செயற்பாட்டாளர்கள் கடந்த 19-ந் தேதி கொண்டாடினர். இதற்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடிய 4 தலித் செயற்பாட்டாளர்கள் மீது உ.பி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட போலீஸ் முதல் தகவல் அறிக்கையில், ஹமிர்பூர் பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் 295, 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹர்தெளல் சிங் கூறுகையில், பெரியார் பிறந்த நாளை கொண்டாடியவர்கள் பகுஜன் சமாஜ் அல்லது பீம் ஆர்மியை சேர்ந்தவர்கள் அல்ல. எந்த ஒரு அமைப்பு, கட்சியிலும் உறுப்பினர்களும் அல்ல. தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் தந்தை பெரியாரின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளவை குறித்தும்தான் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அக்கூட்டத்தில் யாரும் பேசவும் இல்லை. தந்தை பெரியார் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை விவரித்தனர். ஜாதிய, மத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பெரியார் நடத்திய போராட்டங்கள் விவரிக்கப்பட்டன. இதனாலேயே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றார். இதனால் பெரியார் பிறந்த நாள் கூட்டம் நடத்தியவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் ஹர்தெளல் சிங் தெரிவித்துள்ளார்.
#jaunpur_up#periyar_jayanti@_YogendraYadav @mkstalin @Udhaystalin @Profdilipmandal @ANI @dvkperiyar pic.twitter.com/aHGdCEsB6j
— Ashvani kumar (@Ashvani_ykumar) September 19, 2023
உ.பி.யில் பெரியார் பிறந்த நாள்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜவுன்பூர் உள்ளிட்ட இடங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ஜெய் பெரியார் முழக்கத்துடன் இந்த பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.












Click it and Unblock the Notifications