வரதட்சணை தரவில்லை.! மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து.. அதே இடத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்! கொடூரம்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரதட்சணை தரவில்லை என்று கணவரே பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணவரே மனைவியைக் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் அவரது உறவினரே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால், பலாத்கார சம்பவத்திற்குப் பின்னர், கணவர் மனைவிக்கு முத்தலாக் முறையில் விவாகரத்தும் கொடுத்துள்ளாராம். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேடுதல்
இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த முகமது அட்னான் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவரது உறவினர் மீதும் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள உறவினரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வரதட்சணை
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு மிரட்டியும் அடித்தும் வந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார். இதை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், அந்தப் பெண் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கொஞ்ச நாட்களாகவே அந்த பெண் தனது தாயார் வீட்டில் தான் இருந்து வருகிறார்.

கூட்டு பலாத்காரம்
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முகமது அட்னானும் அவரது உறவினரும் மனைவியைப் பார்க்க மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனியாக இருந்துள்ளார். அப்போது வரதட்சணை குறித்து கணவர் கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டவும் தொடங்கி உள்ளனர். அதன் பின்னர் கணவரும் அவரது உறவினரும் தனியாக இருந்த அந்தப் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

முத்தலாக்
அந்த பெண்ணை கொடூரமாகவும் முகமது அட்னான் தாக்கி உள்ளார். மேலும், பலாத்காரம் செய்த மனைவியிடம் அதே இடத்தில் வைத்து முத்தலாக் முறையில் விவாகரத்தும் கொடுத்துள்ளார் அந்த கொடூர கணவர். பெற்றோர் வீடு திரும்பியதும், இது தொடர்பாக அந்த பெண் அவர்களிடம் கூறி உள்ளார். அதன் பின்னரே, அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.

இந்தியாவில் முத்தலாக்
இந்தியாவில் பல ஆண்டுகளாகவே முத்தலாக் முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த 2017ஆம் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்து இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் முத்தலாக் முறை முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications