விசா கிடைப்பதில் சிக்கல்.. பாகிஸ்தான் பெண்ணை வீடியோ காலில் திருமணம் செய்த பாஜக பிரமுகரின் மகன்!
லக்னோ: விசா கிடைப்பதில் சிக்கல் நீடித்த நிலையில் பாஜக பிரமுகரின் மகன் தனது தந்தையின் உதவியுடன் பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் சுமூகமான உறவு என்பது இல்லை. இதற்கு முக்கிய காரணம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பது தான். அதுமட்டுமின்றி நமக்கு சொந்தமான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது. இதுவும் பாகிஸ்தானுடன் நல்ல உறவை பேணுவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் கூட எல்லை கடந்து காதல் திருமணங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இருநாடுகளை சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்வது அவ்வப்போது நடந்து கொண்டே தான் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர்.
அந்த வகையில் பார்த்தால் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி ஹரியானாவை சேர்ந்த சாமியா அர்ஜோ என்பவரை திருமணம் செய்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மோஷின் கான் நடிகை ரீனா ராய், முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் - ரிதா என்பவை திருமணம் செய்தார். பாகிஸ்தான் மாஜி கேப்டன் சோயிப் மாலிக் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தார். தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர்.
அந்த வரிசையில் தான் தற்போது பாஜக பிரமுகரின் மகன் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை ஆன்லைனில் திருமணம் செய்து உள்ளார். இந்த திருமணத்தில் பாஜக தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதாவது உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தக்சீன் ஷாகீத். இவர் பாஜகவில் கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் பெயர் முகமது அப்பாஸ் ஹைதர்.
அதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் ஆண்டலீப் ஜாஹ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கவுன்சிலரான தக்சீன் ஷாகீத்துக்கு உறவுக்கார பெண்ணாகும். இதனால் ஆண்டலீப் ஜாஹ்ரா மற்றும் முகமது அப்பாஸ் ஹைதர் ஆகியோருக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் விசாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் பிரச்சனையால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே தான் மணப்பெண் ஆண்டலீப் ஜாஹ்ரா தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் ஆண்டலீப் ஜாஹ்ராவின் திருமணத்தை உடனே நடத்தியாக வேண்டும் என்று கூறினார். விசா பிரச்சனை இருந்ததால் முகமது அப்பாஸ் ஹைதர் - ஆண்டலீப் ஜாஹ்ராவின் திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து மணப்பெண்ணாக அன்ட்லீல் ஜாக்ராவும், உத்தர பிரதேசத்தில் இருந்து மணமகன் முகமது அப்பாஸ் ஹைதரும் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்டனர். இருவர் தரப்பிலும் மவுலானாக்கள் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்நிலையில் தான் தற்போது திருமணம் நடந்து விட்டதால் ஆண்டலீப் ஜாஹ்ரா இந்தியா வருவதில் சிக்கல் இருக்காது. விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என்று முகமது அப்பாஸ் ஹைதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications