பார்லருக்கு போன மணப்பெண் மாயம்.. விபத்தில் இறந்ததாக குண்டைபோட்ட குடும்பம்.. கடைசியில் ட்விஸ்ட்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்கு சற்று நேரத்துக்கு முன்பாக மணப்பெண் பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது காதலனுடன் எஸ்கேப் ஆனார். இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் மணப்பெண்ணை தேடினர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில் மணமகன் குடும்பத்தினரிடம் மணமகள் பியூட்டி பார்லருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். தங்களது உறவினர்கள், புரோக்கர்கள் மூலம் மாப்பிள்ளை தேடினர். நீண்ட தேடுதலுக்கு பிறகு 27 வயது இளைஞருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் அவர்கள் 2 பேருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் என்பது நடந்தது. இதையடுத்து மீரட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருவீட்டாரும் பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கினர்.
அதன்படி இருவரின் திருமணமும் இன்று நடைபெற இருந்தது. நேற்றைய தினமே மணப்பெண் மற்றும் மணகன் வீட்டார் திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டனர். திருமண மண்டபம் தோரணங்கள் கட்டப்பட்டு விளக்கு அலங்காரத்தில் ஜொலிஜொலித்தது. இரு குடும்பத்தாரும் அதிகளவில் திருமண மண்டபத்தில் கூடியதால் களைகட்டியது.
நேற்று மதியம் மணப்பெண் மேக்கப் போட பியூட்டி பார்லருக்கு புறப்பட்டார். அவருடன் உறவினர்கள் சென்றனர். பியூட்டி பார்லர் அருகே சென்ற மணப்பெண் திடீரென்று 2 ஆண்களுடன் சென்றார். உறவினர்கள் தடுக்க முயன்றும் பலன் அளிக்கவில்லை. விசாரணையில் மணப்பெண் ஒருவரை காதலித்ததும், அவர் தனது காதலருடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பியூட்டி பார்லரில் இருந்து உடனடியாக திருமண மண்டபத்தில் உள்ள மணப்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியாமல் மணப்பெண்ணை தேட தொடங்கினர். நீண்டநேரம் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மணப்பெண்ணை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே மணமகனின் குடும்பத்தினர் மணமகளை எங்கே என்று கேள்வி கேட்க தொடங்கினர். மணமகள் காதலனுடன் ஓடிப்போய்விட்டார் என்று சொல்ல பயந்த குடும்பம், பியூட்டி பார்லருக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் அவர் பலியானதாக குண்டை தூக்கி போட்டனர். இதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் மயங்கி விழுந்தார். இதனால் திருமணம் நின்றது.
அதன்பிறகு மாப்பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்தில் இருந்து மணப்பெண் வீட்டுக்கு சென்றனர். அப்போது தான் மணப்பெண் தனது காதலனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதையடுத்து இருகுடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்துக்கு நடுவே தனது மகளை ஏமாற்றி கடத்தி சென்றதாக பக்பத் உள்பட 2 பேர் மீது மணமகளின் தந்தை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மணப்பெண் மற்றும் அவரது காதலன் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications