எங்கங்க இங்க இருந்த கிட்னிய காணோம்? கல் ஆப்ரேசனுக்கு சென்றவரிடம் ஆட்டைய போட்ட டாக்டர்! உ.பி.ல தான்!
லக்னோ : உத்திர பிரதேசத்தில் சிறுநீரக கல்லை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சைக்கு சென்ற நபரிடம் சிறுநீரகமே மருத்துவர்களால் திருடப்பட்ட சம்பவம் 6 மாதங்களுக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்த்தபோது வெளிச்சத்திற்கு வந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகில் இருக்கும் அனைத்து வினோதங்களும் என்ன ராசியோ தெரியவில்லை உத்திரப்பிரதேச மாநிலத்தில் தான் அரங்கேறுகிறது.. தற்போதும் அப்படி ஒரு வினோதம் இல்லை இல்லை மிகப்பெரிய குற்ற செயலே அந்த மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
வயிற்று வலி என ஸ்கேன் செய்து பார்க்கும் போது உங்கள் கிட்னியை காணவில்லை என மருத்துவர் கூறினால் எப்படி இருக்கும்? உண்மையிலேயே அப்படி ஒருவரிடம் கூறியிருக்கின்றனர் மருத்துவர்கள். என்ன காரணம்? அதன் பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

அதிர்ச்சி சம்பவம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நக்லா தால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். அந்தப் பகுதி காவல் நிலையத்தில் ஹோம் கார்டாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு மிக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் 14ஆம் தேதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துள்ளார். அந்த அறிக்கையில் அவரது இடது சிறுநீரகத்தின் சிறுநீர் குழாயில் சிறுநீரகக் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

சிறுநீரக கல்
இதனையடுத்து அந்த ஸ்கேன் சென்டரில் இருந்த ஒருவர் அலிகாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார். இதை அடுத்து சுரேஷ் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்றே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அறுவை சிகிச்சையின் போது சுரேஷின் சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டதாகவும் மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஏப்ரல் 17ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

கிட்னி மாயம்
தொடர்ந்து மருத்துவர்கள் கொடுத்து வந்த மருந்தை சாப்பிட்டு வந்த நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி சுரேஷுக்கு அடிவயிற்றில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அதே பகுதியில் உள்ள மருத்துவரை அணுகியுள்ளார் சுரேஷ். அப்போது அவரது மருத்துவ அறிக்கைகளை பார்த்த மருத்துவர் அவரை தனி அறையில் வைத்து சோதித்துள்ளார் அப்போது வயிற்றின் இடது பக்கத்தில் அறுவை சிகிச்சை செய்ததற்கான தையல் இருப்பதை பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அப்போது சிறுநீரக கல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ததாக கூறியிருக்கிறார் சுரேஷ். இதை அடுத்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தபோது இடது சிறுநீரகம் காணாமல் போனதாக கூறி இருக்கிறார் மருத்துவர்.

விசாரணைக்கு உத்தரவு
அப்போதுதான் சிறுநீரக கல்லை அகற்றுவதாக கூறி மருத்துவர்கள் சிறுநீரகத்தையே திருடியது தெரியவந்தது. சிறுநீரகத்தை திருடியதோடு மட்டுமல்லாமல் 28 ஆயிரம் பில்லையும் வசூல் செய்திருக்கிறார்கள் அந்த பலே கில்லாடி மருத்துவர்கள். இந்தச் சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உள்ளூர் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த சம்பவம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க குற்றம் சாட்டப்பட்ட அந்த தனியார் மருத்துவமனை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications