முன்னோடி! 33 வருடத்திற்கு முன் தமிழ்நாடு செயல்படுத்திய திட்டத்தை.. உபியில் வாக்குறுதியாக அளித்த பாஜக
லக்னோ: தமிழ்நாட்டில் 33 வருடங்களுக்கு அப்போதைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் ஒன்றை உத்தர பிரதேசத்தில் பாஜக இந்த முறை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் எப்போதும் வட மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள்தான் முன்னோடி. ஒப்பீட்டளவில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் அதிகளவிலான வளர்ச்சி திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொண்டு வரப்படும் பல முற்போக்கான திட்டங்கள் பல வருடங்கள் கழித்துதான் வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. வளர்ச்சி திட்டங்களில் பல மாநிலங்களுக்கு தமிழ்நாடுதான் எப்போதும் ரோல் மாடல்!
உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற யோகியின் கூற்று உண்மையா?
தேர்தல் அறிக்கை
முக்கியமாக இலவச லேப்டாப், சைக்கிள், பஸ் பாஸ், அம்மா உணவகம், சத்துணவு போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டங்களாக அமைந்தன. அதேபோல் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் போன்ற தமிழ்நாடு அரசின் பல திட்டங்கள் மொத்த நாட்டிற்கும் எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கின்றன. தமிழ்நாடு அரசின் இந்த திட்டங்களை பார்த்து வடஇந்திய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது பல முறை நடந்துள்ளது.
வாக்குறுதிகள்
காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை பார்த்து தாங்கள் ஆளும் மாநிலங்களிலும் வாக்குறுதிகளை வழங்கிய சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளது. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டம் ஒன்றை உத்தர பிரதேச பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கி உள்ளது. உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. நாளை சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ளது. சரியாக தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அங்கு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உத்தர பிரதேச தேர்தல்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பாஜக வெளியிட்டு இருக்கும் வாக்குறுதிகளில் முக்கியமானது அனைத்து குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்பது. இது கடந்த 20 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் கொடுத்த வாக்குறுதியாகும்.
பாஜக தேர்தல் அறிக்கை
அது மட்டுமின்றி விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. 1989ல் தமிழ்நாட்டில் விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் சில கட்டுப்பாடுகளால் எதிர்ப்புகள் வந்தாலும் அதை எல்லாம் மீறி அப்போதைய திமுக அரசு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதாவது 33 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் "விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம்" என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு, அது நிறைவேற்றவும் பட்டது. அந்த வாக்குறுதியைத்தான் தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜக வழங்கி உள்ளது.
உத்தர பிரதேசம்
ஆம் 33 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட விவசாய பாசனத்திற்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பாஜக இத்தனை ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசத்தில் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. 3 விவசாய சட்டங்கள் காரணமாக விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். பல இடங்களில் விவசாயிகள் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்தான் விவசாயிகளை கவரும் வகையில் பாஜக இந்த வாக்குறுதியை அளித்துள்ளது.
பாஜக வாக்குறுதிகள்
இது போக கல்லூரி பயிலும் மாணவிகள் அனைவருக்கும் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை பாஜக உத்தர பிரதேசத்தில் அறிவித்துள்ளது. அதேபோல் லவ் ஜிகாத் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் அனைவருக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது போல உத்தர பிரதேசத்தில் 60 வயது தாண்டிய பெண்களுக்கு பொதுப்போக்குவரத்து இலவசம் என்று பாஜக அறிவித்துள்ளது.