மாஸ் காட்டும் உ.பி.. அரசு பள்ளிகளில் இனி கூடுதல் கவனம்.. ஆமா, அதென்ன "ஸ்கூல் சலோ அபியான்".. சபாஷ்
லக்னோ: அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக ஆண்டுதோறும் உத்தரப் பிரதேச அரசு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இப்பிரசாரத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று முதலமைச்சர் அலுவலத்திலிருந்து தொடக்கி வைக்கிறார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என முயன்று வருகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் எனில் அதிகப்படியான எம்பிக்கள் பாஜகாவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே அதிக எம்பி தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தை பாஜக குறி வைத்திருக்கிறது. ஏற்கெனவே இங்கு பாஜகவின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பதால் தங்களது சாதனைகளை மக்கள் மத்தியில் பிரசாரமாக கொண்டு செல்ல கட்சி திட்டமிட்டுள்ளது.

அதேபோல புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அதிரடி காட்டி வருகிறது. அந்த வரிசையில் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் கடந்ததையும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த வேறு யாரும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடித்ததில்லை என்பதே இந்த கொண்டாட்டத்திற்கான காரணமாகும்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக 'ஸ்கூல் சலோ அபியான்' எனும் பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தவாறு இத்திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரசாரம் நடத்தப்படும். கடந்த ஆண்டு யோகி இந்த திட்டத்தை ஷ்ரவஸ்தியில் இருந்து தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்திருக்கின்றனர். பெரும்பாலும் 7-16 வயதுள்ள குழந்தைகள்தான் படிப்பை பாதியில் இடை நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை மையப்படுத்திதான் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதில் உத்தரப் பிரதேச அரசு முன்னணியில் இருக்கிறது. இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். எனவே உத்தரப் பிரதேசம் ஒருபோதும் குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications