"குரூரன்".. எலியை சித்ரவதை செய்து கொடூரமாக கொன்ற இளைஞர்.. பாய்ந்தது வழக்கு.. இத்தனை வருஷமா?
லக்னோ: எலியை கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ இளைஞர் மீது உ.பி. போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில், அவர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது சிறையில் இருக்க நேரிடும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாயில்லா ஜீவனை சித்ரவதை செய்ததுடன் மட்டுமல்லாமல், ஏதோ பெரிய சாதனை செய்ததை போல அந்த இளைஞர் அதை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதுதான் தற்போது அந்த இளைஞர் சிறைக்கு செல்வதற்கு காரணமாகி உள்ளது.
மனிதனுள் மிருகம்
'மனிதன்' என்ற போர்வையில் குரூர மனம் படைத்த மனிதர்கள் சிலர் இன்னும் நம் மத்தயில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுபோன்ற மனிதர்களை தோற்றத்தை பார்த்து நாம் கண்டுபிடிக்க முடியாது. எனினும், அவர்களின் செய்கைகளும், பேச்சுகளும் சில சமயங்களில் அவர்களுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தை வெளிப்படுத்திவிடும். சிலர் சட்டத்துக்கு பயந்தும், சந்தர்ப்பம் கிடைக்காமலும் சக மனிதர்களிடத்தில் தங்கள் குரூர குணத்தை காண்பிக்காமல் இருப்பார்கள். ஆனால், மிருகங்களிடம் அவர்கள் தங்கள் குரூரத்தை வெளிப்படுத்துவார்கள். மிருகத்தை தானே துன்புறுத்துகிறார்கள் என இவர்களை நாம் அலட்சியமாக நினைக்கக் கூடாது. நாளை சந்தர்ப்பம் கிடைக்கையில் சக மனிதர்களுக்கு மிக கொடூரமான ஆபத்தை இவர்கள் விளைவிப்பார்கள். அப்படியொரு குரூர எண்ணம் படைத்த இளைஞர் ஒருவர் செய்த செயலைதான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.
விலங்குகளை பார்த்தால் "வெறி"
உத்தரபிரதேச மாநிலம் புதோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (23). 10-ம் வகுப்பு வரை படித்த இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். பொதுவாக, மனோஜ் குமார் விலங்குகளை அதிகம் துன்புறுத்தும் நபர் எனக் கூறப்படுகிறது. தெருவில் அமைதியாக படுத்துக் கிடக்கும் நாயை பெரிய கற்களை கொண்டு தாக்குவது, மாடுகளை கட்டையை கொண்டு அடிப்பது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் யாரேனும் கேட்டால், அவர்களை கண்டப்படி திட்டுவாராம். இதனால் அந்தப் பகுதியில் உள்ள யாரும் மனோஜ் குமாருடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வது கிடையாது.
சித்ரவதை செய்த 'சைக்கோ'
இந்நிலையில், மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு ஒரு எலி தனது வலைக்குள் வருவதும் போவதுமாக இருந்துள்ளது. வாயில்லா ஜீவன்களை பார்த்தால்தான் இவருக்கு வீரம் பொத்துக்கொண்டு வந்துவிடுமே.. உடனே அந்த எலியை விரட்டிச் சென்று பிடித்த மனோஜ்குமார், தனது குரூரத்தை காண்பிக்க தொடங்கினார். முதலில், அந்த எலியை கழுத்தில் பிடித்துக்கொண்ட அவர், தான் வைத்திருந்த சிகரெட்டால் அதன் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். நெருப்பு பட்டதும் எலி அலறி துடிக்க, அதை பார்த்து மகிழ்ச்சியடைந்த மனோஜ், பின்னர் அதன் வாலில் பெரிய கல்லை கட்டி அங்கிருக்கும் சாக்கடையில் அதை முக்கி முக்கி எடுத்துள்ளார். இதில் அந்த வாயில்லா ஜீவன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்துள்ளது.
பாய்ந்தது 'ஆக்சன்'
இதனிடையே, தான் செய்த செயல்களை தனது செல்போனில் படம்பிடித்திருந்த மனோஜ், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ஒரு எலி இத்தனை கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை பார்த்த நெட்டிசன்கள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த வீடியோவை உத்தரபிரதேச டிஜிபி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு பலர் 'டேக்' (Tag) செய்தனர். இதையடுத்து, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ இளைஞர் மனோஜ் குமார் மீது மிருகவதை தடுப்புச் சட்டம், வாயில்லா ஜீவனை கொடூரமாக கொலை செய்தல், மோசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரிவுகளின் அடிப்படையில் பார்த்தால், அவருக்கு 2 ஆண்டுகளாவது சிறைத்தண்டனை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.