"பப்ஜி காதல்.." எல்லை கடந்த பாக். பெண்ணுக்கு உளவு அமைப்புடன் தொடர்பு? பெரும் பரபரப்பு! தீவிர விசாரணை
லக்னோ: பப்ஜி காதனுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த சீமாவுக்கு ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் இப்போது உபி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 27 வயதான பெண்ணுக்கு பப்ஜி மூலம் உத்தரப் பிரதேச நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கராச்சியில் வசிக்கும் சீமாவுக்கு ஏற்கனவே குலாம் ஹைதர் என்பவருடன் திருமணம் நடந்து குழந்தைகளும் இருக்கிறதாம்.

இருப்பினும், சச்சின் மீது வந்த காதல் அவரை எல்லைகளைக் கடக்க வைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் காதலை வளர்த்த இந்த ஜோடி வாழ்க்கையிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
சீமா: இதற்காக சீமா பாகிஸ்தானில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்று, அதனஅ மூலம் நேபாளம் வந்து அங்கிருந்து இந்தியாவுக்குள் வந்துள்ளார். மேலும், சச்சினும் சீமாவும் இணைந்து நொய்டாவில் ஒன்றாகவும் வாழ ஆரம்பித்துள்ளனர். உரிய விசா இல்லாமல் பாக். நாட்டை சேர்ந்த இந்தப் பெண் இந்தியாவுக்குள் வந்து வசித்து வருகிறார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது.
இருப்பினும், தனக்கு பாக். செல்ல விருப்பம் இல்லை என்றும் சச்சின் உடன் இணைந்தே வாழ விரும்புவதாக அவர் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கிடையே உத்தரப் பிரதேச போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் இன்று மீண்டும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த சீமா ஹைதர் மற்றும் அவரது காதலர் சச்சின் மீனாவின் தந்தை நேத்ரபால் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.. கிரேட்டர் நொய்டாவுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
6 மணி நேரம் விசாரணை: முன்னதாக நேற்று திங்கள்கிழமையும் சுமார் ஆறு மணி நேரம் போலீசாரால் அவர்கள் விசாரிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா, தற்போது தனது இந்திய காதலன் சச்சினுடன் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வருகிறார். அவர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ஐஎஸ் அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சீமா ஹைதரின் மொபைல் டேட்டாக்கள் டெலிட் செய்யப்பட்ட நிலையில், இப்போது அதை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதில் கிடைக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சீமாவின் மாமாவும் சகோதரரும் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால், சீமாவின் மொபைல் டேட்டாவில் இருக்கும் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது..
விசாரிப்பது யார்: மேலும், உரிய விசா இல்லாமல் சீமா இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்தும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. அவரது பாஸ்போர்ட், ஆதார் அட்டை மற்றும் அவரது குழந்தைகள் தொடர்பான பிற ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாக அவர்களிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த விசாரணையை உபி-இன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேரடியாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கும் உள்ளூர் போலீசாருக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உபி-இல் உள்ள வலதுசாரி குழு ஒன்று சீமா அடுத்த 72 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் சென்றுவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, உபி தலைநகர் லக்னோவில் இருந்த ஐஎஸ்ஐ ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர். அவர் இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த முக்கிய தகவல்களைத் திருடி பாக். நாட்டிற்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications