பாஜகவுக்கு ஆதரவு கிடையாது- பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கவும் இல்லை.. புதிர் போடும் மாயவதி
லக்னோ: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதை தமது கட்சி எதிர்க்கவில்லை; அதேநேரத்தில் பொது சிவில் சட்டத்தை பாஜக திணிப்பதையே எதிர்க்கிறோம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உ.பி. மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பொது சிவில் சட்டத்தை நாடு தழுவிய அளவில் உக்கிரமாக எதிர்ப்போம் என ஏற்கனவே முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவித்திருக்கிறது.

பொது சிவில் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்யக் கூடும் எனவும் தெரிகிறது. அப்படி மத்திய பாஜக அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளும் ஆதரவை தெரிவிக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சியை பாஜகவின் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் நகர்வானது தகர்த்துவிடக் கூடியதாகவும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சங்கமிக்காமல் தனித்து இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி, பொது சிவில் சட்டம் தொடர்பான தமது நிலைப்பாட்டை விளக்கி உள்ளார். இது தொடர்பாக மாயவதி கூறுகையில், பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஆதரிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால் பொது சிவில் சட்டத்தை மத்திய்ட பாஜக அரசு திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். பொது சிவில் சட்டத்தை கொண்டு வரக் கூடிய மத்திய அரசின் அணுகுமுறையை எதிர்க்கிறோம். தமது தோல்விகளை மறைக்கத்தான் பாஜக இத்தகைய பொது சிவில் சட்டம் போன்றவற்றை கையில் எடுத்திருக்கிறது. இதனை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்காது என்றார்.












Click it and Unblock the Notifications