மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்த ஜடாபியா.. புதிய பதவி வழங்கிய அமித் ஷா.. என்ன நடக்கிறது பாஜகவில்?
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் லோக் சபா தேர்தல் பொறுப்பாளராக கோர்தான் ஜடாபியா நியமிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் லோக் சபா தேர்தல் பொறுப்பாளராக கோர்தான் ஜடாபியா நியமிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகிறது. இன்றுதான் 17 மாநிலங்களுக்கு பாஜக புதிய பொறுப்பாளரை நியமித்தது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.
அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் லோக் சபா தேர்தல் பொறுப்பாளராக பாஜகவை சேர்ந்த கோர்தான் ஜடாபியா நியமிக்கப்பட்டுள்ளார். எப்போதும் மோடிக்கு எதிராக பேசி வரும் ஜடாபியாவிற்கு இவ்வளவு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யார் ஜடாபியா
பாஜகவை சேர்ந்த முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா, இவர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்தார். 2009ல் பாஜகவில் இருந்து விலகிய இவர் மீண்டும் 2014ல் பாஜகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் இவருக்கும் பிரதமர் மோடிக்கும் பெரிய அளவில் உறவு சரியாக இருந்தது கிடையாது.

பேசி உள்ளார்
ஜடாபியா பல முறை பிரதமர் மோடிக்கு எதிராக பேசி இருக்கிறார். 2002ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று கூட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் ஜடாபியா தெரிவித்து இருக்கிறார். அதை தொடர்ந்து இவர் பலமுறை அமித் ஷா மற்றும் மோடி இணைக்கு எதிராக பேசியுள்ளார்.

பதவி வழங்கியுள்ளனர்
இந்த நிலையில் இவருக்குத்தான் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் லோக் சபா தேர்தல் பொறுப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த பொறுப்பை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அமித் ஷாதான் வகித்து வந்தார். அந்த பொறுப்பை ஜடாபியா தற்போது பெற்று உள்ளார். இதனால் இந்த நியமனம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்எஸ்எஸ் நபர்
இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இளம் வயதில் இருந்த நபர் ஆவார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தற்போது இருக்கும் பெரிய நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் இந்த நியமனத்திற்கு பின் ஆர்எஸ்எஸ் இருக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷாவை மீறி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

பிரச்சனை நிலவி வருகிறது
ஏற்கனவே பாஜகவில், 2019 லோக் சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனையும், குழப்பமும் நடந்து வருகிறது. மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் முயன்று வருவதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில் மோடிக்கு எதிராக பேசிய ஒரு நபரை உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தின் பொறுப்பாளராக நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications