பைனல் இங்கு நடந்திருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும்! அகிலேஷ் யாதவ் என்ன இப்படி சொல்றாரு! இருக்குமோ
லக்னோ: 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் பைனலில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை மிஸ் செய்தது. இந்நிலையில் இறுதி போட்டியை நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தாமல் இருந்தால் லக்னோ மைதானத்தில் நடத்தி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் எனவும், அதன் பின்னணி காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் பரபரப்பாக பேசியுள்ளார்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலககோப்பை போட்டி நடந்து முடிந்துள்ளது. இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவுக்கு பெரிய ஷாக்கை ஆஸ்திரேலியா கொடுத்தது. இந்தியா 3வது முறையாக உலககோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி வைத்தியம் அளித்து 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா உடனான பைனலில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் அதுபற்றி ரசிகர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி அவர் பேசியதாவது:
குஜராத்தில் (நரேந்திர மோடி மைதானம்) நடந்த போட்டி (உலககோப்பை பைனல்) லக்னோவில் நடந்து இருந்தால் இந்தியா வெற்றி பெற்று இருக்கும். ஏனென்றால் இந்திய அணி பலரது ஆசீர்வாதத்தை பெற்றிருப்பார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு விஷ்ணு பகவான் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் ஆசி கிடைத்திருக்கும்.
குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், மைதான பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருப்பதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம்'' எனவும் கூறினார். அகிலேஷ் யாதவ் கூறிய லக்னோ கிரிக்கெட் மைதானம் உத்தர பிரதேச மாநிலத்தில் இதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சி அரசின் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது. அதோடு மைதானத்துக்கு ‛ஏகானா' என பெயரிடப்பட்டது. ஏகானா என்பது கடவுள் விஷ்ணுவின் இன்னொரு பெயராகும்.

இதற்கிடையே தான் கடந்த 2018ல் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மைதானத்தின் பெயரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டது. இதனை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தார். இதையடுத்து தான் தற்போது இந்த மைதானம் ‛பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானம்' என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்து இருந்தால் வாஜ்பாய் மற்றும் விஷ்ணுவின் ஆசி கிடைத்து இருக்கும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருப்பது தெரியவந்தது.
முன்னதாக பைனலில் இந்தியா தோல்வியடைந்தது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருந்தார். அதாவது பிரதமர் மோடியை panauti (கெட்ட சகுனம் கொண்டவர்) என மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். அந்த வரிசையில் தற்போது அகிலேஷ் யாதவ் போட்டி நடந்த நரேந்திர மோடியை மைதானத்தை மறைமுகமாக சாடியுள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications